Exclusive: எனக்கு பாஜகவினர் குறி! உயிர் போகும் வரை பேசுவதை நிறுத்த மாட்டேன்: நாஞ்சில் சம்பத் ஆவேசம்
சென்னை: தன் மீது பாஜகவினர் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சித் தொண்டர்களை ஆற்றுப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை 5 இடங்களில் பாஜகவினர் தன்னை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததோடு முற்றுகையிடவும் முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்! கூண்டோடு தூக்கிய போலீஸார் !கும்பகோணத்தில் பரபரப்பு!
கும்பகோணம் நிகழ்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்றது தொடர்பாக நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, "பாஜகவினர் என்னை தாக்க முயற்சிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே விருத்தாசலம், ஜெயங்கொண்டம், சிவகாசி, என பல இடங்களில் தாக்க முயற்சித்தனர். இன்று கும்பகோணத்திலும் தாக்க முயற்சித்துள்ளார்கள். நான் தமிழிசையிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். அது ஒரு காலமும் நடக்காது. என்னை போன்றவர்களை குறிவைத்தால் பாஜகவுக்கு செலவில்லாமல் விளம்பரம் கிடைக்கிறது. வெற்று விளம்பரத்துக்காக பாஜகவினர் இன்று வன்முறையை கட்டவிழ்த்துவிட முயன்றனர்."
எனக்கு குறி
" எனக்கு பாஜகவினர் குறி வைத்திருக்கிறார்கள். உயிர் போகும் வரை நான் பேசுவதை நிறுத்தமாட்டேன். தரமில்லாத நபர்கள் எல்லாம் என்னை பற்றி தரம்தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். ஆனால் எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. இது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது."
என்னை மட்டுமல்லாமல் நாடறிந்த பேச்சாளர்களையும் அவர்கள் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்."
அடக்குமுறை
" அடக்குமுறைகள் மூலம் என்னை திமுக மேடையில் ஏறவிடாமல் செய்துவிடலாம் என பாஜகவினர் எண்ணுகின்றனர். தம்பி அண்ணாமலை அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களை இனியாவது ஆற்றுப்படுத்தி கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அது தான் அவர் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவிக்கு அழகு. அறம் சார்ந்த அரசியலை தான் நான் விரும்புகிறேன்."
எனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதற்காக பாசிசத்தை எதிர்த்து பேசாமல் இருக்க மாட்டேன்".
தமிழக அரசியல்
"தமிழக அரசியலில் பாஜக கையில் எடுத்துள்ள வன்முறை அரசியல் எந்தக் காலத்திலும் அவர்களுக்கு உதவாது. ஆகையால் அண்ணாமலை அவர்கள் கட்டுப்பாட்டில் பாஜக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை என்றால் இனி அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறேன். மேற்கொண்டு இந்த நிகழ்வை பற்றி பேச விரும்பவில்லை என்பதால் இதோடு முடித்துக்கொள்கிறேன்."