அன்று கர்நாடக மக்களிடம் மண்டியிட்டாரே.. இன்று காலரை தூக்கிவிடுறாரே.. யாரை சொல்கிறார் பாஜக நாராயணன்
சென்னை: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் நடிகர் சத்யராஜை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. அவர் தனது உரையை தமிழில் படிக்க ஆரம்பித்தார். அப்போது முதலே திமுக கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து சிறிது நேரத்தில் ஆளுநர் உரையை கண்டித்து வெளிநடப்பும் செய்துவிட்டனர்.
இந்த நிலையில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஆளுநர் அவையில் இருந்த போதே முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரை தொடர்பாக தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
சட்டம் ஒழுங்கு ..பழனிச்சாமி புகார்..பதிலுக்கு பட்டியலிட்ட முதல்வர்..அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
தீர்மானம்
பின்னர் தீர்மானத்தையும் வாசித்து ஆளுநர் படித்த உரை அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அரசு தயாரித்து கொடுத்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அவையில் நடப்பது என்ன என அறியாத ஆளுநர் தனது தனி செயலாளரிடம் கேட்டறிந்தார்.
கோபம்
பின்னர் ஆளுநர் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிவிட்டார். தேசிய கீதத்திற்கு மதிப்பு தராமல் எழுந்து சென்றதாக ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அது போல் ஆளுநர், சபாநாயகர் மட்டுமே பேச வேண்டிய நிகழ்வில் முதல்வர் பேசியது மரபுகளுக்கு எதிரானது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
தமிழ்நாடு அரசு
ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் தீர்மானத்தை படித்த போது ஆளுநர் பாதியில் வெளியேறியதை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். அவரது நடையை ஸ்லோ மோஷன் வீடியோவாக போட்டு பாட்ஷா பாட்ஷா பாட்டை வைத்து வைரலாக்கி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்
அது போல் முதல்வர் ஸ்டாலினை சம்பவக்காரர் என கூறி திமுக ஐடி விங் கொண்டாடி வருகிறார்கள். ஆளுநருக்கு பதிலடி கொடுத்ததாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் பெரியாரிஸ்டுமான சத்யராஜ் தமிழக அரசை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மனிதனுக்கு அழகு சிரிப்புதான்
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: மனிதருக்கு அழகு சிரிப்புதான். அந்த சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை ரொம்பே கவர்ந்துவிட்டது. அது சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினின் புன்னகை, அந்த புன்னகையில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை சுடர்விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது.
ஹேட்ஸ் ஆஃப் ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்தெழுந்தது. தமிழ்நாடு எனும் மாநிலத்தில் வாழும் ஒரு சாதாரண குடிமகனாக முதல்வரின் புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியையும் அடைகிறேன். காலரை கூட தூக்கிவிட்டுக் கொள்கிறேன். Hatsoff to our CM Muthuvel Karunanidhi Stalin என சத்யராஜ் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக நாராயணன் ட்விட்டர்
இதுகுறித்து பாஜக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்காக, காசுக்காக சுயமரியாதையை இழந்து, கர்நாடக மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஒரு நபர் இன்று காலரை தூக்கி விட்டு கொள்வதாக சொல்வது கேலிக்கூத்து என யார் பெயரையும் குறிப்பிடாமல் ட்வீட் போட்டுள்ளார். காலரை தூக்கி என வருவதால் அவர் சத்யராஜை விமர்சிக்கிறார் என்றே தெரிகிறது.
நடிகர் சத்யராஜ் வருத்தம்
கடந்த 2017 கர்நாடகா மக்களிடம் நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்ட விஷயத்தைதான் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு காவிரி விவகாரத்தில் கர்நாடகா அமைப்புகளுக்கு எதிராக பேசிய பேச்சுக்காக சத்யராஜ் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் நடித்து வெளிவரவிருந்த பாகுபலி 2 கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் என்னால் அத்தகைய பிரம்மாண்டமான படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. எனவே எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிடுமாறு கன்னட அமைப்புகளை கேடடுக் கொள்வதாக வீடியோ வெளியிட்டிருந்தார் சத்யராஜ்.