தேசிய கொடி அவமதிப்பு வழக்கு - மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ் வி சேகர் மீண்டும் ஆஜர்
தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
சென்னை: தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார். அவரிடம் 2ஆம் கட்டமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார் எஸ்.வி சேகர். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 24ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசிய கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவல்துறை தரப்பு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்த கருத்தை தெரிவித்ததாகவும் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறை இந்த வழக்கில் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் ஆஜரானதாகவும் விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28 ஆம் தேதி ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.வி.சேகர் தரப்பில் சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பழிவாங்கும் நோக்கில் தன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதால், அடுத்த விசாரணை வரை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
விசாரணையின் போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும், இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதனிடையே இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் மீண்டும் ஆஜராகியுள்ளார். அவரிடம் 2ஆம் கட்டமாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் கைது செய்யப்படுவாரா? கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பாரா என்று அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே காவல்துறையினர் முடிவு செய்வார்கள்.












Click it and Unblock the Notifications