ஜாதிகளை கையில் வச்சுக்கிட்டு.. கீழ்த்தரமான அரசியல்.. திருமாவளவன் மீது அண்ணாமலை கடும் பாய்ச்சல்!
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் வலியுறுத்தி இருந்த நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஜாதிகளை கையிலே பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் மட்டும்தான் இப்படி யோசிப்பார்கள்" என அண்ணாமலை திருமாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக கைத்தறி பருத்தி துணியால் நெய்த தேசியக் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஆளுநர் ரவி - ரஜினி சந்திப்பை அரசியலாக்குகின்றனர்..இருப்பிடத்தை காட்டவே விமர்சனம்.. அண்ணாமலை பதிலடி!
விதிகளில் மாற்றம்
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த கொண்டாட்டங்களை மேலும் சிறப்பாக்க அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து, தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் பயன்பாட்டில் இருந்த விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. முன்னதாக கைத்தறி பருத்தி துணியால் நெய்த கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்எஸ்எஸ்
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2ம் தேதியில் இருந்து சுதந்திர ஆக.15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த கருத்துக்கு நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களும் வரவேற்புகளும் வந்த வண்ணமிருந்தது. இதனையடுத்து, இதுகுறித்து ட்விட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "வீட்டுக்கு வீடு தேசியக் கொடியேற்றக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸின் அலுவலகத்தில் ஏற்றுவாரா? இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான். தேசியக் கொடியிலுள்ள தர்மச் சக்கரமான அசோக சக்கரம் கூடாது என்பதும் காவியைத் தேசியக் கொடியாக்க வேண்டும் என்பதுமே அவர்தம் நோக்கம்" என்று கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.
கண்டனம்
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. "ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி தேசியக் கொடிகளை விநியோகித்து வருகின்றனர். தேசியக் கொடி பற்றி ஆர்எஸ்எஸ்ஸுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் கூறியிருந்தார். சரி இத்துடன் இந்த சர்ச்சை முற்று பெரும் என்று நினைக்கையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, திருமாவளவன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
"தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றச் சொல்வது கார்ப்ரேட் கொள்கை என திருமாவளவன் கூறியிருக்கிறாரே?" என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, "எந்த அளவிற்கு தமிழகத்திலேயே அரசியல்வாதிகள் மாறியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். மிகக் கீழ்த்தரமான பிற்போக்குகாக எதற்கு அரசியல் செய்கின்றோம் என்பதையே மறந்து ஜாதிகளை கையிலே பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் மட்டும்தான் இப்படி யோசிப்பார்கள்" என கூறினார்.
விமர்சனம்
மேலும், "சுதந்திர தின இன்பப் பெருவிழா 75ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைவரும் இது நமது சுதந்திரம் என்பதை உணர்ந்து கொண்டாடும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் ஏற்றப்படும் நமது தேசியக்கொடியானது ஜம்மு காஷ்மீரிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இப்படியாக சுதந்திர தினத்தை ஒவ்வொரு இந்தியனும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், பேசுவதற்கு எதுவும் அற்ற அரசியல்வாதிகள்தான் இவ்வாறான பிற்போக்கு கருத்துக்களை பேசிக்கொண்டிருப்பார்கள்" எனக்கூறியுள்ளார்.