கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் 2 - ரோஜாவே தமிழ் பேசு
: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 2 பாட்டுத் தொடரின் முதல் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2 பாட்டுத்தொடர் ஏப்ரல் 17 முதல் வெளியாக உள்ள நிலையில் பாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரோஜாவே தமிழ் பேசு என்ற முதல் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்து 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறலின் முதல் பாகம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த பாடல்கள் பற்றி கூறியுள்ள கவிஞர் வைரமுத்து தமிழ் இலக்கியத்தில், ஒரு புதுவகை வேதி வினையை நிகழ்த்தக் கூடும் நாட்படு தேறல். பாரதி சொன்னது போல், சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது எனத் தன்னை நிறுவி, தமிழ் இலக்கியப் பரப்பில், அடர்ந்த அழகிய தாக்கத்தை அது ஏற்படுத்தக் கூடும். அது தமிழின் உயரத்தை உயர்த்துகிறதோ இல்லையோ, தமிழ் ரசனையின் உயரத்தை அது வெகுவாகவே உயர்த்தும்.
நாட்படு தேறலைத் துய்க்கும் இளம் படைப்பாளிகள், தங்கள் மொழிநடையை உயர்த்திக்கொண்டு, வழிநடையை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது உலகத் தமிழர்களின் அறிவுக்கு அறுசுவை விருந்து. மனதிற்கு மயிலிறகின் வருடல். ரசனைக்கு ராஜபோதை. தமிழில் இன்னொரு சாதனை எல்லையைத் தொடும் முயற்சி இது. தொய்ந்து கிடக்கும் தமிழ் உணர்வைத் தூக்கி நிறுத்தும் முயற்சிகளுள் ஒன்று.
"நாட்படு தேறல்' எனில் நாட்பட்ட மது அல்லது கள் என்று பொருள். நாட்படு தேறல், நான் எதிர்பார்ப்பதை விடவும் நல்ல பல விளைவுகளை, இசை வெளியிலும் மொழி வெளியிலும் ஏற்படுத்தும்.

இந்த பாடல்களை 86 வயது பி.சுசீலாவும் பாடியிருக்கிறார். 16 வயது உத்ரா உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார். தேவா- ஏ.ஆர். ரகுமான் என்னும் இருவேறு தலைமுறை இசைக் கலைஞர்களும்கூட மெட்டமைத்திருக்கிறார்கள். ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான் போன்ற இளைய இசையமைப்பாளர்களும் ஈரம் கசியக் கசிய, என் வரிகளை இசை வயப்படுத்தி இழைய விட்டிருக்கிறார்கள். இன்னும் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னால் விண்வெளி யில் டூயட் பாடப்போகும் நாளைய காதலர்களுக்கான இதயத் துடிப்பையும் பூங்கவிதைகளாய் மலரவிட்டிருக்கிறேன்.
கண்ணனைக் கனவுச் சொற்கள் கொண்டு பரவசப் பாசுரங்களால் ஆராதித்த ஆண்டாளைப் போல், ஆண்டாளை எண்ணிக் கண்ணன் கிறங்கிப் பாடுவது போன்ற பாசுரத்தையும் பார்த்துப் பார்த்துப் பக்குவமாய் எழுதியிருக்கிறேன். காஃபி ஷாப் கலாசாரத்துக்கு ஏற்பவும் கூட பாடலை உருவாக்கியிருக்கிறேன் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
நாட்படு தேறல் 2 பாட்டுத் தொடரின் முதல் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோஜாவே தமிழ் பேசு என்று எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து
ரோஜாவே தமிழ் பேசு
செடியில் பூத்த நட்சத்திரமே
சிரிப்பில் எழுதிய சித்திரமே
சின்னஞ்சிறு காலம்தான்
நீ வாழ்வது - ஆனால்
காற்றில் ஒரு பெருவாழ்வு
நீயெழுதிப்போவது
எங்ஙனம் உன்னால் ஆனது
வான் கொடுத்தாலும் விண்மீண் போதும்
மண் கொடுத்தாலும்
மலரொன்று போதும்
கடல் கொடுத்தாலும்
ஒரு விண் மீன் போதும்
பெரியது எல்லாம்
பெரும் பொருள் இல்லை
சிறியது எல்லாம்
சிறு பொருள் இல்லை
பயன்களைப் பொறுத்தே
பொருட்களின் எல்லை
வெயிலுக்குத் தன்னை
விருந்து வைத்தாலும்
முயலுக்கு தாகம்
தீர்த்து வைத்தாலும்
பனித்துளி வாழ்வு
பூரணமாகும்
தொடங்கிய வாழ்வை
அழகு செய்தாலும்
அடங்கிய வாழ்வை
அமைதி செய்தாலும்
மலர்களின் வாழ்வு
பூரணமாகும்
இந்த பாடலை இசையடைத்து இயக்கியிருப்பவர் ரமேஷ் தமிழ் மணி குரல்: பாம்பே ஜெயஸ்ரீ. வைரமுத்து எழுதியுள்ள நாட்படு தேறல் 2 வரும் 17ஆம் தேதி ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ளது. வைரமுத்து யுடியூப் சேனலில் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும். இசையருவியில் 1.30 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என வைரமுத்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications