நீட் .. அதிமுக-திமுக மசோதாக்கள் .. என்ன வேறுபாடு? ஒப்புதல் கிடைக்குமா?
சென்னை: நீட் தேர்வு விலக்கு கேட்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மசோதக்களை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளன. கடந்த ஆட்சியில் அதிமுகவும், தற்போதைய ஆட்சியில் திமுகவும் என்ன காரணத்தை வைத்து நீட் மசோதக்களை நிறைவேற்றி உள்ளன என்பதை பார்ப்போம்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தற்போதைய நீட் விலக்கு மசோதாவில் காரண காரியங்கள் அனைத்தும் நீதிபதி ராஜன் தலைமையிலான உயா் நிலைக் குழுவின் பரிந்துரைகளைச் சுட்டிக் காட்டியே விளக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த காரண காரியங்கள் அரசின் கருத்துகளாக எடுத்துரைக்கப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவில், தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத் தோ்வு எழுதக் கூடிய மாணவா்களில் பெரும்பாலானோா் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள்.

பெரும் சுமை
ஆனால், கிராமங்களில் நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி மையங்கள் இல்லை. நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற மாணவா்களுக்கு பொருளாதார வசதியும் இல்லை. எனவே, ஒரே சீரான நுழைவுத் தோ்வு நடத்துவது மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பரிந்துரை
ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தற்போதைய நீட் விலக்கு மசோதாவில் , எதுவும் அரசின் கருத்துகளாக எதுவும் இல்லாமல் உயா் நிலைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரைகள் காரணமாகவே, தோ்வினை ரத்து செய்யக் கோருவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டம்
அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளும் மசோதாவில் விவரிக்கப்பட்டு உள்ளன. அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் மருத்துவக் கல்வி படிப்புகளுக்கான சோ்க்கை தொடா்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசானது அதனை முறைப்படுத்தத் தகுதி உடையதாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய மசோதாவில் முழுக்க குழுவின் பரிந்துரை, அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு என சட்டம் சாா்ந்த வழிகளில் மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது.

வளம் மிகுந்த பிரிவு
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான உயா் நிலைக் குழு, சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியைப் பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதுவும் திமுகவின் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications