நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் பாதிப்பு மற்றும் மாற்று மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவம் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனைக் கருதியே, சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12-வது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.
Recommended Video
சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டுக்கு எப்போதும் உண்டு. இந்த கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது.
இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்கள் குறித்தும் அதற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.