நீட் தேர்வு.. தமிழகத்தில் பறிபோனது மேலும் ஒரு உயிர்.. வேலூர் அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை: மருத்துவத்திற்கான, நீட் நுழைவுத் தேர்வு விவகாரம், தொடர்பாக மேலும் ஒரு இளம் உயிர் தமிழகத்தில் பறிபோயுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சவுந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுக்க நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
.

சட்டப் போராட்டங்கள்
திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் இந்த வருடம் நேற்று நுழைவுத் தேர்வு நடைபெறாது என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டப் போராட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் என தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்தபோதிலும் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பின்வாங்கப் போவதில்லை என்று தெரிந்ததும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று தேர்வுக்கு தயாராகும்படி தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இது காலம் தாழ்ந்த நடவடிக்கை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இப்படியான நிலையில்தான் நீட் தேர்வு நடைபெற்றது.

மாணவர் தனுஷ்
இந்த நிலையில்தான், நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டார். இரு முறை நீட் தேர்வில் தோல்வியுற்ற நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார் தனுஷ். மீண்டும் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இது போன்ற தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Recommended Video

தேர்வு அச்சம்
இந்த சோகம் மறைவதற்குள், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி - ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் கனிமொழி (17) நீட் தேர்வை சரிவர எழுதவில்லை என்ற அச்சத்தால் தற்கொலை செய்தார். தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக புலம்பி வந்ததாகவும், இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவினர்கள் தெரிவித்தனர்.

காட்பாடி மாணவி
அடுத்தடுத்த இந்த சோக சம்பவங்களின் வடு ஆறும் முன்பாக, காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என விரக்தியில் சவுந்தர்யா இருந்ததாகவும், எனவே மன உளைச்சலால் சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் மன உளைச்சல் அடைய கூடாது என்பதற்காக கவுன்சிலிங் வகுப்புகள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்குள்ளாக மூன்று இளம் உயிர்களை தமிழ்நாடு இழந்து விட்டது என்பது பெரிய சோகம்.












Click it and Unblock the Notifications