இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள்... அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
நீட் தேர்வினால் தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: மாநில பாடத்திட்டத்தைத் தாண்டி இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் இரண்டு நாட்கள் கல்வி சிந்தனை அரங்கு - 2022, என்ற கலந்துரையாடல் கூட்டத்தை சென்னையில் நடத்தியது. இதில் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவுக்கு நீட் தேவை இல்லை' என்ற தலைப்பில் பேசினார். ஏழை மக்கள், கிராமத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் நீட் தேர்வு எதிரானதாக இருப்பதாகவும் பொன்முடி குற்றஞ்சாட்டினார்.
நீட்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீடு செல்லுபடியாகுமா? சென்னை ஹைகோர்ட் கருத்து
பாடத்திட்டத்தைத் தாண்டி நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து மாணவர்கள் படித்து வருகின்றனர். நீட் தேர்வின் பெரும்பாலான கேள்வித்தாள்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன. அதனால், தமிழ் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.
நீட் விலக்கு
எந்த பாடத்தை படித்தாலும் திறமையோடு படிக்க வேண்டும் என்றார் அமைச்சர் பொன்முடி. மாநில பாடத்திட்டத்தைத் தாண்டி ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகின்றன. மாநில உரிமையைப் பாதுகாக்க நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்றைய முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு பெற்றுத் தந்தார். தற்போது பெரும்பாலான மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநில கல்வி உரிமை பாதிப்பு
சர்வதேச பாடத்திட்டத்தை வழங்குகிறோம் எனக் கூறி மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிக்கின்றனர். இது முழுமையாக ஒத்துவராத ஒன்று என்று கூறினார். அடிப்படை கல்வியில் இருந்தே நுழைவுத்தேர்வு கொண்டு வருவது சரியானது அல்ல என்றார். மாநில அளவிலேயே நடைபெறும் நுழைவுத் தேர்வைக் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நீட்டுக்கு எதிராகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர் என்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்கு ஒரே பாடத்திட்டம் சரியாக இருக்காது. நாடு முழுவதும் ஒரே கல்வி என்பது சரிப்பட்டு வராது என்றார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் படிப்பது குறைவாக உள்ளது. தமிழகத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தில் படிப்பவர்கள்தான் அதிகம்.
3 மணி நேர நீட் தேர்வு
ஒரு மாணவர் பன்னிரண்டு வருடங்கள் படித்த பாடத்திட்டத்தை 3 மணிநேர நீட் தேர்வில் எப்படி முடிவெடுப்பது? 180 கேள்விகளில் எப்படி பதில் சொல்ல முடியும். நீட்தேர்வு இல்லாத 2016-2017 கல்வியாண்டில் மாநில பாடத்தில் படித்த 3,400 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வானார்கள். எங்களுடைய காலத்தில் மேல்நிலைக்கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி படிக்க முடிந்தது என்றார்.
யாருக்கு பாதிப்பு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 35 பேர் மட்டுமே தேர்வானார்கள். அதாவது, தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 12.14 சதவிகிதம் பேர் மருத்துவப் படிப்புக்குத் தேர்வானார்கள். ஆனால், நீட்தேர்வு வந்தபிறகு 1.7 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். எனவே, நீட் தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியில் கேட்ட கேள்விகளை இங்கே நீட் தேர்வில் கேட்பதால் நமது மாணவர்கள் நீட் தேர்வில் பாஸ் செய்வது கடினமாக உள்ளது.
மன அழுத்தம் அதிகரிப்பு
நீட் தேர்வு வந்த பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்துவதைக் குறைத்துவிட்டனர். மாநில பாடத்திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றதால் உயிரிழந்ததாகக் கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வினால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகமாவதாகவும் பொன் முடி குற்றம் சாட்டியுள்ளார். நீட் கோச்சிங் சென்டர் சென்று படிப்பதைத்தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார் பொன்முடி. நீட் தேர்வினால் தனியார் பயிற்சி மையங்கள்தான் கொள்ளையடிப்பதாக கூறினார்.
தமிழக கல்வி தரமான கல்வி
கல்வி என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். பல மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு பல நுழைவுத்தேர்வுகளை வைத்து அவர்களை அச்சுறுத்தக்கூடாது என்றார். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்தான். அவர்களின் தரம் குறைவாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களைத்தான் உயர்கல்விக்கு தேர்வு செய்ய வேண்டுமே தவிர நீட் என்பது தேவையற்றது என்று கூறினார் அமைச்சர் பொன்முடி.