நீட் தேர்வு.. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் உதயநிதி ஸ்டாலின் 'கடும்' பதிலடி.. அனல் பறக்கும் ட்வீட்!
சென்னை: அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசை நடத்துகிற-அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற அதிமுக& எதிர்க்கட்சிகள், திமுக அரசை குறைசொல்வது வெற்று அரசியல் மட்டுமே என உதயநிதி ஸ்டாலின் ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.
Recommended Video
முன்னதாக நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்த சேலம் மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், இன்று காலை திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக , மநீம, பாஜக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

வெற்று முழக்கம்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் காட்டமாகே அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், :தமிழ் நாட்டில் நீட் தேர்வினை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து தவிக்கும் பெற்றோர். தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான திரு. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களை திசை திருப்பி, தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்
நான் கடந்த ஜூன் மாதம் சட்டசபையில், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் மழுப்பலான பதிலை அளித்தார். மேலும் நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய அமைத்த குழு, உச்சநீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த தி.மு.க. அரசு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும் என்றும், இந்தக் குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும் / பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு, இதற்கு எதிராக யாரும் மனுத் தாக்கல் செய்யமுடியாது என்றும், இந்த குழு அமைக்கப்பட்டதால் இந்த மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

பரிந்துரை
மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த 14 பக்கத் தீர்ப்பில் இந்த அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள வாசகங்களை அப்படியே குறிப்பிட்டு, குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதற்கு எதிரான இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தி.மு.க. அரசு குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ, அன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பழி சுமத்தினர்
தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய திரு. ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக """"பாதம் தாங்கிகள், எதிர்கட்சியானப் பிறகும் பி.ஜே.பி-யின் அடிமைகள்'' என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, எங்கள் மீது பழி சுமத்தியுள்ளார். தேர்தலில் ஜெயிக்க, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றிபெற்ற பின் தற்போது வாக்குறுதிகள் நிறைவேற்றாததற்கு காரணம், மாநிலத்தின் நிதிநிலை மோசம் என்று எப்போதும் போல் மற்றவர் தலையில் காரணத்தை சுமத்தும் இந்த அரசு, நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, நீட்டை ஒழிப்பதற்கான வழிமுறைகள் எங்களுக்குத் தெரியும் என்று பொதுக்கூட்ட மேடையில் வாய்ச்சவடால் அளித்தவாறு, கேலிச் சிரிப்பு சிரித்தபடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று, மாணவச் செல்வங்களை வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவச் செல்வத்தை நீட்டிற்கு தாரை வார்த்துள்ளோம்.

தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி திரு. சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடையாத நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பேச்சை நம்பி, இந்த முறை நீட் தேர்விற்கு முழுமையாக தயாராகாமல், இன்று நடைபெறுகின்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்தமுறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றச் செய்தி அறிந்து மிகுந்த கவலையும், மனவருத்தமும் அடைந்துள்ளேன். தமிழக மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.

மாணவ செல்வங்கள்
ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும். அதைவிடுத்து நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, அதை தடுப்பதற்குண்டான வழிமுறைகள் எனக்குத் தெரியும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நாங்கள் இடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று மாணவச்செல்வங்களை ஏமாற்றும் விதத்தில் தேர்தல் சமயத்தில் பேசியதன் விளைவு, இன்று நாம் இன்னொரு மாணவச் செல்வத்தை பலி கொடுத்திருக்கிறோம்.

தெளிவு இல்லை
தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா?, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தனுஷின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று மாணவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டி, எதிர்கட்சித் தலைவர் (நான்) இந்த கேள்வியை சட்டப் பேரவையில் மூன்று முறை தொடர்ச்சியாக எழுப்பிய போதும், இந்த அரசு தெளிவான பதில் அளித்திருந்தால் இன்று ஒரு உயிர் பலியாகி இருக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், இன்று (12.9.2021) நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில், நாளை சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்த அரசு தீர்மானம் கொண்டுவரப் போவதாக தற்போதைய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நான் ஏற்கெனவே, எனது சென்ற அறிக்கையில் கூறிய அதே குறளை மீண்டும் ஒரு முறை இந்த அரசிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். என்ற வள்ளுவர் வாக்கின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்த நாங்கள் நீட் தேர்வு உட்பட தமிழகத்தை பாதிக்கும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும், எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம். உங்களைப்போல் நாங்கள் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியிருந்தார்.

மேடை முழக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அப்பாவி மாணவர்கள்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த பதிவில், ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திராவிட முன்னேற்ற கழகம் நிறுத்தட்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு" என்று கடுமையாக கூறியிருந்தார்.

10லட்சம் நிவாரண நிதி
இதனிடையே திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், நீட் தந்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மேட்டூர் மாணவன் தனுஷின் வீட்டுக்குசென்று அவரின் உடலுக்கு மரியாதை செய்து பெற்றோருக்கு ஆறுதல் கூறினோம். இன்னோர் உயிர் போகாமல் காக்க அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம் என்று கூறினார். அத்துடன் மாணவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அளித்தார்.

உதயநிதி பதிலடி
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசை நடத்துகிற-அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற அதிமுக& எதிர்க்கட்சிகள், திமுக அரசை குறைசொல்வது வெற்று அரசியல் மட்டுமே என காட்டமாக கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications