நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக தேவையிருப்பின் தமிழ்நாடு அரசு புதிய வழக்கு!
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு சட்டசபையின் மசோதாவை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக தேவையிருப்பின் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினாலும் உச்சநீதிமன்ற அனுமதியுடன் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையாமல் இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டு முதல் இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாட்டிலும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தபப்ட்டது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முந்தைய அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தரவே முடியாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு பின்னர் நிராகரித்தார். இதனையடுத்து 2022-ம் ஆண்டும் தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தந்திருக்க வேண்டும்; ஆனால் ஜனாதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியது சர்ச்சையானது.
மேலும் நீட் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் மற்றும் நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்வதும் அதிகரித்து வந்தது. அண்மைக்காலத்தில் 4 மாணவர்கள் அடுத்தடுத்து நீட் தேர்வால் தற்கொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 4-ந் தேதி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை அகற்றுவதற்கான நமது போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. நீட் தேர்வில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஏப்ரல் 9-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் நீட் விலக்கு கோரும் விவகாரம் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அதிமுக, பாஜக புறக்கணித்தன.
இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது மற்றும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிராக தேவையிருப்பின் புதிய வழக்கு தொடரப்படும் என்கிற தீர்மானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதனடிப்படையில் நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு புதிய வழக்கு தொடரக் கூடும்.












Click it and Unblock the Notifications