நீட் தேர்வு : அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
போட்டித் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பயிற்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையருக்கு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை, அவர்களே மேற்கொள்ள வேண்டும், என, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியச் சுற்றறிக்கையில், தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார். போட்டித் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, நடப்பு கல்வியாண்டிலும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்தி முடிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், 2 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், குறைக்கப்பட்ட பாடங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னுரிமை பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், போட்டித் தேர்வுகளுக்கு இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசே தொடர்ந்து பயிற்சி வழங்க வேண்டியப் பொறுப்பு உள்ளது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை, அவர்களே மேற்கொள்ள வேண்டும்," என, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் 16/08/2021 அன்று, தலைமை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியச் சுற்றறிக்கையில், தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.
இது தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கும், அண்மையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கும், எதிரானதாகும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்," அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறிவரும் கருத்துக்கும் எதிரானதாகும்.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடரும் நிலையில், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு, மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் , அவர்களுக்கு "நீட்" உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசே தொடர்ந்து பயிற்சி வழங்க வேண்டியப் பொறுப்பு உள்ளது. எனவே, பள்ளிக் கல்வி ஆணையர் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்துதலுக்கு எதிராக செயல்படுவது சரியல்ல. திமுக தேர்தல் அறிக்கையில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் சேரவும் பயிற்சி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ்,ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், செவிலியர் படிப்புகளுக்கும் நீட் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
40,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் உட்பட பல் மருத்துவம்,ஆயுஷ் மருத்துவ இடங்கள் என ஒரு லட்சத்துக்கும் மேலான இடங்கள் மத்திய அரசு ,அகில இந்திய தொகுப்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ளன. நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் இவ்விடங்களில், தமிழக மாணவர்கள் பெறும் இடங்கள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே,தமிழகம் நீட்டிலிருந்து விலக்கைப் பெற்றாலும் கூட ,நீட் தேர்வு உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளுக்கு, தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு, தமிழக அரசே பயிற்சி அளிக்க வேண்டும். போட்டித் தேர்வு பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்கள், அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும்,என்பது, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
அரசு சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் போட்டித் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளதால், அதற்கு முரணாக நீட் பயிற்சி அளிப்பது சரியான நடைமுறையாக இருக்காது என்று அரசு கருதுவதாக பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்திருப்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நீட் பயிற்சி வகுப்புகள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீட் தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனிடையே நீட் தேர்வு குறித்து சட்டசபையில் பேசிய மு.க ஸ்டாலின், நீதியரசர் ஏ.கே ராஜன் குழு அளித்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். தமிழக அரசுப் மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டாக்டர்களின் கோரிக்கையை ஏற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வு எழுதும் வகையில் பயிற்சி அளிக்க முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications