"இந்திரம்- ஐந்திரம்" - "இந்தியா" குறித்து சு.வெங்கடேசன் எம்பி பேச்சு - அயோத்திதாசர் எழுதியது என்ன?
சென்னை: இந்தியா என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர் அல்ல; ஐந்திரன் - இந்திரன் என்ற பெயரின் அடிப்படையில் இந்தியா என மாறியதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியது சமூக வலைதளங்களில் விவாதமாகி இருக்கிறது.
"இந்தியா" என்ற பெயர் குறித்து அயோத்திதாச பண்டிதர் எழுதியதை மேற்கோள்காட்டி சு.வெங்கடேசன் எம்.பி. பேசியிருந்தார். ஆனால் இதனை பலரும் ஏற்க மறுத்து விமர்சித்து வருகின்றனர்.

"இந்தியா" பெயர் தொடர்பாக அயோத்திதாச பண்டிதர் எழுதியிருப்பதாவது:
இந்திரம் என்னும் மொழி ஐந்திரமென்னும் மொழியின் திரிபாகும். அதாவது, மகதநாட்டுச் சக்ரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்ரவர்த்தி அவர்கள் கல்லாலடியில் வீற்றிருந்து ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று ஐ என்பது இ யாகத் திரிந்து இந்திரரென வழங்கியது. அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடும் காலத்திற்கு இந்திரவிழா நாள், இந்திர விழாக்கோலென்றும் பெயரிட்டார்கள்.
இந்திரவிழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதன் அனுபவம் கண்டு மழைக்கு முன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்.
இந்தியா என்பது பிரிட்டீஸார் வைத்த பெயர் என்று சொல்கின்றனர். அது உண்மையல்ல,
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 18, 2023
ஐம்புலன்களையும் அடக்கியாண்ட சித்தார்த்தன் ஐந்திரன் என்று புகழப்படுகிறான்.
ஐந்திரன் என்ற பெயர் இந்திரனாக மாறுகிறது. அதுவே இந்திரர் நாடாகிறது. பின் இந்திய நாடாகிறது.
-1909 ல் அயோத்திதாசர் எழுதியுள்ளது pic.twitter.com/Og9JyitrZH
பண்டைய நாட்களில் இத்தேசத்தைப் பரதகண்டம் என்று வழங்கியதும் உண்டு, காரணம் என்னவெனில் ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடி வந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறததை போதித்தது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதல் நூலுக்கு "வரதன் பயந்த முதநூலென்றும்", அவரைக் கொண்டாடிய இந்தத் தேசத்திற்கு வடபரதம் தென்பரதம் என்றும் கொண்டாடி வந்தார்கள்.
இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் சிறப்பாகச் செய்யப்படாமல் இந்திரரென்னும், பெயரிலே விழாக்களையும், வியாரங்களையும் சிறப்பாகச் செய்யப்பட்ட காரணத்தால் இத்தேச மக்களை இந்தியர்க ளென்றும், இத் தேசத்தை இந்திய தேசமென்றும் வழங்கி வந்தார்கள். அதுகொண்டு வட இந்தியமென்றும், தென் இந்திய மென்றும் பிரபலப் பெயருண்டாயிற்று.
அந்நாளில் இந்திரர் தேசத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷை என்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அப்போது ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதி வைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாக இருந்தனர். சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்டனர். அதை' கண்ட புத்தபிரான் சகடபாஷை எனப்படும் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷை என்று அறியப்படும் தழிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர் பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறங்களை வரைந்து சகல மக்கள் மனதிலும் பதியச்செய்தார். அதுமட்டுமின்றி இன்னும் அந்த வரிவடிவ பாஷையைத் தான் நிலைநாட்டிவருகின்ற பௌத்த சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்தார். சத்திய தன்மமானது மேலும் மேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி முதலானவர்களுக்கு சமஸ்கிருதத்தையும், அகத்தியருக்குத் திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வட திசையிலும், அகத்தியரை தென் திசையிலும், திருமூலரை மேற்புறத்திலும், சட்ட முனிவரை கீழ்த் திசையிலும் அனுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்த மொழிகளின் வரிவடிவங்களை ஊன்றிப் பரவச் செய்து அதன்வழியே மெய் அறமாம் புத்ததன்மத்தையும் பரவச்செய்தார். இவ்வாறு அயோத்திதாச பண்டிதர் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications