புத்தாண்டு.. பொங்கல் வாழ்த்து அட்டைகள் ஞாபகம் இருக்கா.. 90ஸ்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று
சென்னை: புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. ஆனால் இந்த இரு நாட்களுக்கு வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து அதில் விரும்பிய கவிதைகளை எழுதி, பிடித்தவர்களுக்கு சர்ப்பரைஸாக அனுப்பி வைப்பது என்பது 90ஸ்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
நலம் நலம் அறிய ஆவல் என்று கடிதங்கள் அனுப்புவதே இன்றைக்கு இல்லை. தேவைக்காகவே, ஒவ்வொருவரிடமும் பேசும் வழக்கமும் அதிகரித்துவிட்டது. தேவை இல்லாமல் இவரிடம் நாம் என்ன பேசுவது என்ற நிலைக்கு... இன்றைக்கு பலரும் மாறிவிட்டார்கள்
கையில் மொபைல் போன், அதுவும் இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம், வீடியோ கால் பேசலாம் என்கிற நிலை உள்ள இந்த காலத்தில் தான் உறவுகள், நட்புகளின் மீதான ஈடுபாடு பெரிய அளவில் குறைந்து போய், சுத்தமாக இயந்திரமான வாழ்க்கைக்கு பலர் வாழ பழகிவிட்டார்கள்.
வாழ்த்து அட்டைகள்
நீங்கள் 90களில் அல்லது 80களில் பிறந்தவர்கள் என்றால் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தினை புத்தாண்டு , பொங்கல் வாழ்த்து அட்டைகள் பிடித்திருக்கும்.
நண்பனுக்கு கடிதம்
இன்றைக்கு போல் 90களிலோ அல்லது 2000களிலோ ஒவ்வொரு ஊரிலும் மேல்நிலைப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் கிடையாது. பெரும்பாலான ஊர்களில் 8வது வரை தான் இருக்கும். அப்படித்தான் தேனி அருகே வடபுதுப்பட்டி கிராமத்தில் 8வது வரை நானும் என் நண்பன் ஈஸ்வரனும் ஒன்றாக படித்தோம். அவன் எட்டாம் வகுப்பில் ராயப்பன்பட்டிக்கு ஹாஸ்டலில் படிக்க சென்றுவிட்டான். இப்போது உள்ளது போல் அப்போது போன் உள்ளிட்ட எந்த வசதியும் பெரிதாக இல்லை.
தேடிவந்து நன்றி
இதேபோன்ற அரையாண்டு விடுமுறையில் தான் பொங்கல் வாழ்த்து அட்டையை நானும் எனது இன்னொரு நண்பனும் வாங்கினோம். அதில் எங்கள் நண்பனை பற்றி நலம் விசாரித்து அழகிய கவிதை எழுதி அனுப்பி வைத்தோம். அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த அவன் பின்னாளில் ஊருக்கு வந்த போது தேடிவந்து நன்றி சொன்னான்.
அரையாண்டு விடுமுறை
அரையாண்டு விடுமுறைவிடப்படும் இந்த சமயத்தில் தான் நண்பர்களின் பிரிவு அதிகமாக சோகத்தை தரும். எனவே அப்போது தான் என்னை போலவே பலரும் தாங்கள் விரும்பிய நண்பர்களுக்கு, தோழிகளுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக் கார்டுகளை 90களில் பிறந்தவர்கள் வாங்கி அனுப்பி இருப்பார்கள்.
பள்ளி காதலிகள்
தங்களுக்கு பிடித்த பள்ளி காதலிகளுக்கு அதில் சாக்லேட் வைத்து பல 90ஸ் ஆண்கள் கொடுத்திருப்பார்கள். அப்படி கொடுத்து காதலை சொல்லியவர்கள் பலர் இருக்கலாம். அதற்காக உதையும் திட்டும் வாங்கியும் இருப்பார்கள்.
வாழ்த்து அட்டைகள்
பிடித்த ஆசிரியர்களுக்கு சாக்லேட் வைத்து பொங்கல் வாழ்த்து அட்டைகளை வீட்டுக்கே தபாலில் அனுப்பிய அனுபவத்தையும் பார்த்ததுண்டு. அதை பார்த்து நெகிழும் ஆசிரியர் பதிலுக்கு மாணவனுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பி இருக்கிறார்கள்.
பக்கத்து வீட்டு பெண்கள்
பக்கத்துவிட்டு பெண் தொடங்கி அத்தை பெண்கள், மாமா பெண்கள், அக்கா, அண்ணன், சித்தி, மாமா என பிரிந்து சென்று வெளியூரில் வசித்த அத்தனை உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்து மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை அழகான அட்டையை தேர்ந்தெடுத்து அனுப்பும் வழக்கம் அப்போது இருந்தது. ஆனால் அவை எல்லாம் வெறும் நினைவுகளாக மட்டுமே இப்போது பலரது மனதில் இருக்கிறது. இப்போது அழகான அந்த வாழ்க்கைகளை அசைபோடுவது மட்டுமே ஆனந்தமாக இருக்கிறது.