பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை புகார்.. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை.. சென்னை ஹைகோர்ட்
சென்னை: எஸ்.பி. அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகச் ராஜேஸ் தாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் எஸ்.பி. புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்தப் புகார் குறித்த விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையைக் கண்காணித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம் என்றார்.
இந்த புகார் விசாரணை தொடர்பாகத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு விசாரணையை எந்த விதத்திலும் ஏற்படுத்தாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications