திருக்குறளை படித்தால் புரியும்.. காவிக்கும் திருவள்ளுவருக்கும் சம்பந்தமில்லை.. கனிமொழி 'நச்' பதில்!
சென்னை: திருக்குறளுக்கும் காவிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் திருவள்ளுவருக்கு காவி பூசிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
வடசென்னையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு திமுக சார்பாக பொங்கல் பரிசுகளை கனிமொழி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சிகள் 17 இடங்களில் நடந்து வருகிறது. உணவு திருவிழா மற்றும் கலைத் திருவிழா இரண்டிற்கும் மக்கள் தங்களின் முழு வரவேற்பை அளித்துள்ளார்கள். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
அச்சம் என்பது மடமையடா.. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பனும்! இது தான் 'ஒரே’ வழி! இபிஎஸ் கொடுத்த ஐடியா!
எஸ்பிஐ தேர்வு
தொடர்ந்து, பொங்கல் பண்டிகையன்று எஸ்பிஐ தேர்வு நடத்தப்பட்டது பற்றிய கேள்விக்கு, திமுக சார்பாக எஸ்பிஐ தேர்வு நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி இருந்தார். தமிழ்நாட்டில் எப்படி பொங்கல் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் வடமாநிலங்களிலும் விவசாய அறுவடை திருவிழாக்கள் நடக்கிறது.
தமிழர்களின் உணர்வு
இதனால் பொங்கலன்று மக்களின் உணர்வை மதிக்காமல், எஸ்பிஐ தேர்வை நடத்தியிருப்பது நாட்டின் ஒற்றுமை குழைப்பதாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வை மத்திய அரசு எப்போதும் உணர்ந்ததில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வை ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட அனைவரும் புண்படுத்துகிறார்கள் என்று விமர்சித்தார்.
தமிழ்ப் புத்தாண்டு
தொடர்ந்து தை 1ம் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை பற்றிய கேள்விக்கு, தமிழ்ப் புத்தாண்டாக தான் கொண்டாடி வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த பின், அதன் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தமிழர்களின் வீரம்
பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கவிருப்பது பற்றிய கேள்விக்கு, தமிழ்நாட்டின் வீரம், உணர்வு இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆளுநர் ஆர்.என்.ரவி செல்கிறார். யாராக இருந்தாலும் வரவேற்று நமது கலை மற்றும் பண்பாட்டை சொல்லி தருவோம் என்று தெரிவித்தார்.
திருக்குறளும் காவியும்
தொடர்ந்து, திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்தது பற்றிய கேள்விக்கு, திருக்குறளை படித்தால், அதற்கும் காவிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று புரிந்து கொள்வார்கள். முதலில் படிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருக்குறளுக்கு எழுதிய உரை தெளிவாக இருக்கிறது என்று பதில் அளித்தார்.