டிரைவிங் லைசென்ஸ் பெற கல்வி தகுதி தேவையில்லை.! விபத்துகள் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் பெற கல்வி தகுதி தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவிற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பவர்களின் கல்வித் தகுதி குறைந்தபட்சம் 8ம் வகுப்பாக உள்ளது. இந்த நிபந்தனையை தளர்த்தி மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அண்மையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டிரைவிங் லைசென்ஸ் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்ற சட்டப் பிரிவை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இந்த நிபந்தனையால் தகுதியுள்ள, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் உள்ளனர். எனவே மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989-ல் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.
ஆனால் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கினால் விபத்துகள் அதிகரிக்கும் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து சம்மேளனத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை படித்திருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்ற நிலையே தொடர வேண்டும்.
தற்போது உள்ள கல்வித்தகுதியே இருப்பவர்களின் டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்து கொள்ள போதுமானதாக இல்லை என்பது எங்கள் கருத்து. ஏனெனில் இப்போது லைசென்ஸை புதுப்பிக்க வேண்டுமென்றால், டிஜிட்டல் முறையில் பதிவு செய்த பின்னரே புதுப்பிக்க முடியும். அப்போது அடுத்தவர்களின் தயவை நாடி தான் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க கூடிய சூழல் நிலவுகிறது.
நிலைமை இப்படி இருக்க கல்வி தகுதியே தேவையில்லை என்று சொல்வதை, நிச்சயம் ஏற்று கொள்ள முடியாது. எனவே குறைந்தபட்சம் தற்போது உள்ள விதியே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் ஒருவர், சாலை விபத்துகளை பொருத்த வரை நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதே போல இந்திய அளவிலும் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கல்வி தகுதியை முற்றிலும் நீக்கி விட்டால் அது பேராபத்தில் தான் போய் முடியும். கல்வி தகுதியை நீக்கிவிட்டால் நிசச்யம் தேசியளவில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
இருசக்கர வாகனங்கள் கார்கள் கனரக வாகனங்கள் அனைத்துமே உயர்தர தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்டுகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து கொள்ளவும், ஒருவருக்கு கல்வி தகுதி அவசியமாக உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுப்பது மிக அபாயகரமானது என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.