விரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி?.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி!
சென்னை: தி.மு.க இல்லை என்றால் திராவிட இயக்கத்தை யாரும் காப்பாற்ற முடியாது என்று புகழேந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமாக இருந்த வா.புகழேந்தி அண்மையில் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஏற்கனவே சசிகலா அணியில் இருந்த புகழேந்தி அங்கு இருந்து பிரிந்து அ.தி.மு.க.வில் இணைந்து இருந்தார். அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசி வந்த நிலையில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கம்
இதனை தொடர்ந்து கே.பி.முனுசாமிக்கு எதிராக கருத்து கூறிய புகழேந்தி சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதனால் தான் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. மேலும், 'பா.ம.கவால் அ.தி.மு.க.வுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் போட்டதால்தான் இன்று அன்புமணி ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார்' என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியதும் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தன.

அப்பாவுவுடன் சந்திப்பு
இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை விட இ.பி.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்து வந்தார் புகழேந்தி. இந்த நிலையில் தி.மு.க மூத்த தலைவரும், சபாநாயகருமான அப்பாவுவை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார் புகழேந்தி. இதனால் அவர் தி.மு.க.வுக்கு செல்ல போகிறார் என்று தகவல்கள் பரவ தொடங்கிய நிலையில் அப்பாவுவை சந்தித்த பிறகு நிருபர்களை பேட்டியளித்த புகழேந்தி மேற்கண்ட தகவல்களை சூசமாக தெரிவித்துள்ளார்.

ஒ.பி.எஸ் - இ பி எஸ் மீது குற்றச்சாட்டு
புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி இதுதான்:- தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அப்பாவு தற்போது சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார். தனது கடின உழைப்பால் உயர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தேன். ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகிய இருவரும் அ.தி.மு.க.வை விற்பதற்கு டெல்லியின் வீதிகளில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

டெல்லி தெருக்களில் அலைகின்றனர்
அவர்கள் கட்சியை காப்பாற்ற டெல்லி தெருக்களில் அலையவில்லை. தங்களை காப்பாற்றிக் கொள்ளவே டெல்லி தெருக்களில் அலைகிறார்கள் என்பது தான் உண்மை. மக்கள் பிரச்சனைக்காக சென்றிருந்தால் கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் டெல்லி சென்றிருக்க வேண்டும். அவர்கள் அப்படி செல்லவில்லை. தங்கள் அடிமை வாழ்வை தொடரவே இருவரும் டெல்லி சென்றுள்ளனர்.

எடப்பாடி எனும் சர்வாதிகாரி
அ.தி.மு.க மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி எனும் சர்வாதிகாரியின் பிடியில் அ.தி.மு.க பரிதவித்து வருகிறது. ஒ.பி.எஸ் - இ பி எஸ் ஆகியோரால் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியாது. சசிகலாவால் மட்டுமே அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும். சசிகலா அழைத்தால் நான் பேசுவதற்கும் பார்ப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.

தி.மு.க.வுக்கு பாராட்டு
இன்றைய தினம் தி.மு.க இல்லை என்றால் திராவிட இயக்கத்தை யாரும் காப்பாற்ற முடியாது என்ற நிலை உள்ளது. பெரியார் பெயர் வைத்து வளர்ந்தவன் நான். திராவிட இயக்க சிந்தனையில்தான் என்னுடைய அடுத்தக்கட்ட செயல்பாடு இருக்கும். இதுதொடர்பாக விரைவில் என்னுடைய முடிவை அறிவிப்பேன். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார். புகழேந்தியின் இந்த பேட்டியின் மூலம் அவர் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications