"நாளை காலை.." வானிலை மையம் தந்த பரபர அலர்ட்.. தமிழகத்தில் மழை இருக்குமா.. சென்னை கிளைமேட் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் என்ன மாதிரியான வானிலை இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்தது. முதலில் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை வைத்துச் செய்த நிலையில், அதன் பிறகு தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.

ஆனால், அதன் பிறகு மழை நின்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டுமே கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.
வானிலை: இதற்கிடையே அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன. 21) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை (ஜன.22) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. ஜன. 23 முதல் முதல் ஜன. 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: இன்று ஜன. 21 மற்றும் ஜன. 22 தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு என்று பார்க்கும் போது காயல்பட்டினம் (தூத்துக்குடி) 20 மிமீ மழை பெய்துள்ளது.. மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), நாங்குனேரி (திருநெல்வேலி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), சிட்டம்பட்டி (மதுரை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 10 மிமீ மழை பெய்துள்ளது.. அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் வாரத்திற்குப் பிறகு நாளை அனைவரும் வழக்கம் போல பணிக்குத் திரும்ப உள்ள நிலையில், ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்யும் என்பதால் வானிலை குறித்த கவலையில்லாமல் பொதுமக்கள் தங்கள் வேலையைக் கவனிக்கலாம்.












Click it and Unblock the Notifications