வட கிழக்கு பருவமழை.. நிரம்பி வழியும் ஏரி, குளங்கள்..சென்னையில் இயல்பை விட கூடுதலாக பெய்த மழை
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த கால கட்டத்தில் இயல்பை விட 26 சதவிகிதம் அதிக அளவு மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் முடிய வடகிழக்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பருவ மழைகள் தப்பாமல் பெய்து வருகிறது.
தமிழகத்தின் அனைத்து நீர் தேவைகளையும் பருவமழையை சார்ந்தே உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழையில் இயல்பு நிலையை எட்டிவிடும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நீர்வளத்துறை ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மேட்டூர் அணை
தென்மேற்கு பருவமழை காலத்திலேயே தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பி விட்டன. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நூற்றாண்டுகளில் இல்லாத மழை அளவாக 43 செமீ மழை கொட்டித்தீர்த்தது. அங்குள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வழிகின்றன பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இயல்பை விட கூடுதல்
கடந்த 3 வருடமாக வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அபரிமிதமாக கொட்டித்தீர்த்தது. கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் இயல்பான அளவை விட கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன.

சராசரி மழை அளவு
அக்டோபர் இறுதி முதல் நவம்பர் 16 வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 449.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு இயல்பை விட 59 சதவிகிதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் பெய்த மழை அளவு 327 மில்லி மீட்டராகும். இந்த காலகட்டத்தில் 283.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் அதை விட 15 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 26% அதிகம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது. 11 மாவட்டங்களில் மட்டுமே மழைப்பொழிவு குறைவாக உள்ளது. வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் சென்னையில் 518.2 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 652 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 26 சதவிகிதம் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications