ரிசர்வ் பெட்டிகளில் 'டென்ட்' போட்ட வடஇந்தியர்கள்.. நொந்துபோன சென்னைவாசிகள்.. 2 நாள் சோக பயணம்
சென்னை: வாரணாசியிலிருந்து சென்னை வந்த ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல் வட மாநிலத்தவர்கள் கூட்டமாக ஏறியதால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு போதிய இடம் கிடைக்கவில்லையென ரயில் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் சுமார் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.
இதில் சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் ரயில்வே துறையில் புகார் அளித்த பின்னரும் ரயில்வே காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ! அலறிய பயணிகள்! ஓடும் ரயிலில் திக் திக் நொடிகள்! என்ன காரணம்?
வடமாநில இளைஞர்கள்
தமிழ்நாட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கடந்த 23ம் தேதி வாரணாசியிலிருந்து பாட்னா-எர்ணாகுளம் ரயிலில் சென்னை நோக்கி குடும்பத்துடன் திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். இதற்காக உரிய தொகை கொடுத்து முன்பதிவும் செய்திருக்கிறார். ஆனால் வாரணாசியில் ரயில் கிளம்பிய நிலையில், 300க்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் திடீரென முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளனர். இதனால் முன்பதிவு செய்த பாலமுருகன் உட்பட பல பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது, "நாங்கள் வாரணாசியிலிருந்து குடும்பத்துடன் 2A பிரிவில் டிக்கெட் புக் செய்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தோம். இந்நிலையில் வாரணாசியிலிருந்து ரயில் புறப்பட்டு அடுத்த நிறுத்தத்தை சென்றவுடன் 300க்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் எங்களது பெட்டியில் ஏறிக்கொண்டனர்.
குழந்தைகள் பெண்கள்
இவ்வாறு ஏறியவர்கள் டிக்கெட் மற்றும் பயண விவரம் எதையும் சரியாக கூறவில்லை. நாங்கள் முன்பதிவு செய்த இருக்கைகளில் அவர்கள் இடம்பிடித்து அமர்ந்துகொண்டார்கள். எங்களுடன் வயதானவர்களும், நோயாளிகளும், பெண்களும், குழந்தைகளும் பயணித்தனர். அவர்கள் உறங்குவதற்கு கூட இவர்கள் இடமளிக்கவில்லை. எங்கு இறங்க வேண்டும் என்று கேட்டால் சென்னை என்று கூறினார்கள். இது ஒரு சில மணி நேர பயணம் கிடையாது. முழுமையாக இரண்டு நாட்கள் பயணமாகும். எங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குழந்தைகள் உறங்க வேண்டும் என்று கூறினார்கள். பெண்களால் கழிவறைக்கு செல்ல முடியவில்லை.
உணவு
இது குறித்து நாங்கள் ஏறத்தாழ 5 புகார் எண்களை அணுகினோம். அவர்கள் அனைவரும் நாங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இதற்கான தீர்வை கூறவில்லை. எங்களிடம் உள்ள உடமைகளை சரிபார்ப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இது குறித்து ஒரு ரயில் நிறுத்தத்தில் இறங்கி பணியில் இருந்த காவலரிடமே புகார் கூறினோம். ஆனாலும் அவர்கள் இந்த இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வேறு வழியின்றி கடைசியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தோம். ஒரு வழியாக ரயில் நின்றது. எங்களுக்கும் பெருமூச்சு அப்போதுதான் வந்தது. ஆனால், நாங்கள் ஆசுவாசம் அடைவதற்குள் மீண்டும் ரயில் கிளம்பிவிட்டது. நாங்கள் மீண்டும் மீண்டும் சங்கிலியை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் ரயில் நிற்கவேயில்லை.
பதில் இல்லை
கழிவறை அருகிலும் வடமாநில இளைஞர்கள் அமர்ந்திருந்ததால் எங்களால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதனால் நாங்கள் உணவு எடுத்துக்கொள்ளாமலேயே பயணித்தோம். உணவு எடுத்துக்கொண்டால் கழிவறையை பயன்படுத்த வேண்டுமே என்கிற பயம் எங்களுக்குள் இருந்தது. எங்களுடன் இருந்த நோயாளிகளும் குழந்தைகளும் இதனால் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதனை எதிர்த்து கேட்டபோது அவர்கள் எங்களை தாக்க முற்பட்டார்கள். எனவே வேறு வழியின்றி நாங்கள் அப்படியே பயணிக்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியுள்ளனர். இந்த புகார் தொடர்பான வீடியோக்களையும் பயணி பாலமுருகன் டிவிட்டரில் பகிர்ந்து ரயில்வே நிர்வாகத்தை டேக் செய்திருந்தார். ஆனால் ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.