”முதலில் ஓபிஎஸ் வந்துள்ளார்” அதிமுகவில் போகப்போக எல்லாம் சரியாகும்.. சிக்னல் கொடுத்த சசிகலா!
சென்னை: அதிமுக ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று தான் சொல்லி வந்த நிலையில், அதற்கேற்ப ஓபிஎஸ் முதலில் வந்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் ஓபிஎஸ் - இபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வழங்க உள்ளது. அந்த தீர்ப்பை பொருத்துதான் இரு தரப்பினரும் அடுத்த கட்ட நடவடிக்கையை நகர்த்த முடிவு செய்து உள்ளனர்.
இதனிடையே ஓபிஎஸ் தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளுக்காக பெரியகுளத்தில் தங்கியுள்ளார். அவருடன் ஆதரவாளர்களும் இருக்கும் சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மவுனம் காத்த சசிகலா
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றாக இணைந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விடுத்தபோதே, சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். இதற்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்திருந்தார். ஆனால் சசிகலா தரப்பில் எந்த பேச்சும் இல்லாமல் இருந்தது.

ஓபிஎஸ் திட்டம்
இருந்தும் அதிமுகவில் இருவரையும் சேர்க்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணையும் பட்சத்தில் அதிமுகவில் தனது கைகள் ஓங்கும் என்று ஓபிஎஸ் தரப்பில் நம்பப்படுகிறது. எனவே சசிகலாவையும், டிடிவி தினகரனையும் விரைவில் சந்தித்து பேச ஓபிஎஸ் தரப்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.

சசிகலா வழிபாடு
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் வெளியில் இருக்கும் ஜெய கணபதி விநாயகரை வி.கே.சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோர் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சசிகலா கூறுகையில், அதிமுக ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி வருகிறேன். முதலில் ஓபிஎஸ் வந்துள்ளார். இதனால் அதிமுகவில் போகப்போக எல்லாம் சரியாகும்.

சசிகலா பேட்டி
தமிழகத்தில் இப்போது உள்ள அரசு மக்களுக்கான அரசாக தெரியவில்லை. மக்களுக்காக எதிர்க்க வேண்டிய விஷயங்களை போராடி பெற்றுத் தருவோம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் அழைப்பை சசிகலா வரவேற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் மனைவி மறைவின் போது சசிகலா நேரடியாக ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆறுதல் கூறினார். இதனால் ஓபிஎஸ் மனைவி நினைவு நாளில் மீண்டும் இரு தரப்பும் பேச வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications