சிறப்பு விதி இருக்கே.. பொதுக்குழுவே மேலானது என்பதை ஏற்க முடியாது.. பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் தரப்பு!
சென்னை : "அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி அதிமுக" என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதத்தை முன்வைத்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் தலா ஒரு மணி நேரம் வாதம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்யமா சுந்தரம், சி.எஸ். வைத்தியநாதன், விஜய் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.
அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது. ஓபிஎஸ் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் அல்ல. தனது உரிமை பாதிக்கப்பட்டதால் தான் ஓபிஎஸ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஒன்றரை கோடி உறுப்பினர்களின் உரிமை பாதிக்கப்படவில்லை.
அதிமுகவின் விதிகளின்படி தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுதான் உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பு. அதில் எடுக்கும் முடிவே அதிமுக கட்சியில் இறுதியானது. கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் என வாதிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, விசாரணை 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் தனது வாதங்களை எடுத்து வைத்து வருகிறார்.
ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான்.
அதிமுகவின் சிறப்பு விதி அது. இது தொடர்பாக விதியைக் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். தலைமைப் பதவியை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல வாதங்களை முன்வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications