கலங்கும் வாகன ஓட்டிகள்.. காவல்துறைக்கு உத்தரவிடுங்கள்.. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
சென்னை : வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காவல்துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. "சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம் தெரிய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சம் என்ற பக்கம்தான் தெரிய வேண்டும்" என்பார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 8-5-2021 ம் ஆம் தேதியிட்ட அரசாணையின்படி 10.5.2021 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அந்தப் பணியினை மேற்கொள்ள ஏதுவாக வாகனங்களில் சென்று இ-பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டப்படி உரிமை உள்ளது
இதன் அடிப்படையில் இ-பதிவு செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கும், இ-பதிவு செய்யாமல், அனுமதியின்றி, சட்டத்தை மீறி இயக்கப்டும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கும் காவல் துறையினருக்கு முழுஉரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

உதிரி பாகங்கள் இருக்காது
ஆனால் இ-பதிவு முறையைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை திரும்பத் தரக்கோரி வாகன ஓட்டிகள் இரண்டாவது நாளாக திருவெற்றியூரில் சாலை மறியல் செய்து வருவதாகவம் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. அவர்கள் மறியல் செய்வதற்கான மற்றொரு முக்கியமான காரணம், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழலில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதுதான்.

திருடிவிடுவார்கள்
அவர்களுடைய கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது. ஏற்கனவே முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள், தங்கள் வாகனங்களில் உள்ள விலை உயர்ந்த உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் களவாடப்படுமேயானால், அந்த உதிரி பாகங்களை புதிதாக வாங்க பல ஆயிரம் ரூபாய்களை மேலும் அவர்கள் செலவழிக்க வேண்டி வரும். இதன்மூலம் அவர்கள் மேலும் கடனாளியாக ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

கண்காணிக்க முடியாது
காவல்துறையினருக்கும் தற்போதுள்ள வேலைப் பளுவில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சேதாரம் ஏதுமில்லாமல் இருக்கின்றனவா என்பதை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல். எனவே வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கையினை கனிவுடன் பரிசீலனை செய்து, "சட்டப்படி நடப்பவருக்கு நண்பர்" என்பதை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டின் இ-பதிவு முறையில், அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், அதன் உரிமையாளர்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமாய் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications