Exclusive ஓபிஎஸ்ஸை சேர்க்க ரெடி!? ஈபிஎஸ் அணிக்குள் குழப்பமா? இதான் முடிவு.. சொல்கிறார் ஜெயக்குமார்!
சென்னை : அதிமுக ஆட்சியை ஓ.பன்னீர்செல்வம் கவிழ்க்க முயற்சித்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நமது 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் ஏற்பட்டு, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அணியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்த்துக் கொள்ளவே மாட்டோம் எனத் தெரிவித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
இந்நிலையில், ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் பிளவு ஏற்படக்கூடாது, கட்டுப்பாட்டோடு பல நூறு வருடங்கள் வழிநடத்தப்பட வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கிறோம். ஒரு தொண்டனாக தார்மீக அடிப்படையில் நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவு தருகிறோம் எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
Exclusive: கொங்கு கட்சியா அதிமுக? திமுக இந்தி எதிர்ப்புக்கு இதுதான் காரணம்! விபிபி பரமசிவம் அதிரடி!
மாறுபட்ட கருத்துகள்
எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸை ஒருக்காலம் இனி சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறி வரும் நிலையில், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் ஈபிஎஸ்ஸின் தலைமையை ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்ஸை இணைத்துக்கொள்ளத் தயார் எனக் கூறி வருகின்றனர். எடப்பாடி அணியினர் மாறுபட்ட வகையில் பேசி தொண்டர்களை குழப்புவது பற்றி ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எடப்பாடி சொல்வதுதான் உறுதியானது
அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், "எடப்பாடி பழனிசாமியே நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் எந்தக் காலத்திலும், ஓ பன்னீர்செல்வத்தையோ, சசிகலாவையோ, டிடிவி தினகரனையோ நாங்கள் இணைப்பதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதே கருத்தைத்தான் நானும் சொன்னேன். பொதுச் செயலாளரின் கருத்தையே நானும் பிரதிபலிக்கிறேன். ஓபிஎஸ்ஸுக்கு எந்த ஆதரவும் இல்லை, ஓபிஎஸ்ஸால் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தைக் கூட நடத்த முடியவில்லை, அவரது பலம் அவ்வளவுதான்." என்றார்.
இடைத்தேர்தல்
மேலும் பேசிய ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதியிலேயே அதிமுக தோல்வியடைந்தது. அவ்வளவுதான் ஓபிஎஸ்ஸின் தொண்டர் பலம். ஆளுங்கட்சியாக இருக்கும்போதே இடைத்தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. மினி சட்டமன்றத் தேர்தல் போல 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 9 தொகுதிகளுக்கு மேல் வென்றால் தான் ஓபிஎஸ்ஸும் அமைச்சராக, துணை முதல்வராக இருக்க முடியும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியும், அதிமுக ஆட்சியே இருக்கும்.
2 தொகுதிகளை காலி செய்தார்
9 தொகுதிகளில் வென்றால் தான் அதிமுக ஆட்சி இருக்கும் என்ற நிலையில், நம் மாவட்டத்தில் 2 தொகுதிகளையும் காலி செய்துவிட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும், தனக்கு ஒரு கண் போனால், எடப்பாடிக்கு 2 கண்ணும் போகவேண்டும் என்ற எண்ணம் தான் ஓபிஎஸ் தான். தீய எண்ணத்தோடு, கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்தார். ஆனால், நாங்கள் அதை மீறி 9 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சியைக் காப்பாற்றி விட்டோம்.
ஆட்சியை கவிழ்க்க முயற்சி
ஓபிஎஸ் செய்தது ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தான். ஓபிஎஸ்ஸின் மகனான ரவீந்திரநாத் மட்டும் எப்படி அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்? தன் மகனுக்கு விழுந்த ஓட்டுகள், அதே எம்.பி தொகுதிக்குள் அடங்கிய எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு அதிமுகவுக்கு விழவில்லை. எப்படி இதை அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் ஏற்றுக்கொள்வான்? சட்டமன்ற பொதுத் தேர்தலிலிலும் தேனி மாவட்டத்தில் மற்ற அத்தனை தொகுதிகளிலும் அதிமுக தோற்றது. ஓபிஎஸ் மட்டும் வெற்றி பெற்றார்.
அதிமுக ஆட்சி வரக்கூடாது
அதிமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாடுபட்டார் ஓபிஎஸ். ஆட்சியில் இருக்கும்போது இடைத்தேர்தலில் தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். பொதுத்தேர்தலில், எல்லா இடங்களையும் தோற்று ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார். இதுதான் ஓபிஎஸ்ஸின் திட்டம். அதிமுகவுக்கும், கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்தார். அவரால் கட்சிக்கு எந்த நன்மையும் இல்லை, அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.