கயிற்றின் முனை இப்போதும் எடப்பாடி கையில்.. ஓபிஎஸ்க்கு காத்திருக்கும் சிக்கல்கள்- அடுத்த பிளான் என்ன?
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மேலோட்டமாகப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமானதாக தெரிந்தாலும் கூட, ஈபிஎஸ் கையிலும் கயிற்றின் முனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
Recommended Video
ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு சட்டப்பூர்வமற்றது என நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், அவர், சட்டப்பூர்வமாக மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்கலாம் என்ற நிலையே இருக்கிறது.
ஒற்றைத் தலைமை தொடர்பான திருத்தங்களை பொதுக்குழுவில் மேற்கொள்ள தடை இல்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சம், ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இதனால், ஓபிஎஸ் தரப்பு ஒரு கண்டத்தில் இருந்து தப்பித்திருந்தாலும், அடுத்தடுத்த சுழல்களைத் தாண்டுவாரா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது.
ஓபிஎஸ் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று.. அதிமுக வங்கி கணக்குகள் கையாள வாய்ப்பா? தீர்ப்பு கூறுவது என்ன?
ஐகோர்ட் அளித்த தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த ஜூலை 11ஆம் தேதி கூட்டிய பொதுக்குழுவில், அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அம்மன் வைரமுத்து ஆகியோர் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இரட்டைத் தலைமையே தொடரும்
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் உருவெடுத்தது செல்லாமல் ஆகி, அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை நிலையே தொடர்வது உறுதியாகியுள்ளது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் அனைத்தும் ரத்தாகியுள்ளது.
யாருக்கு சாதகம்?
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் என்றும், கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேநேரம், ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக எல்லாம் இந்தத் தீர்ப்பு இல்லை, இதில் அவர்கள் கொண்டாட எதுவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர். அதுவும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.
மறுக்கக்கூடாது
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில், இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனத் தெரிவித்திருக்கும் அதேநேரத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பகுதியினர் கடிதம் கொடுத்து பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கோரினால், ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அதனை மறுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்த தடை இல்லை
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே முரண் இருந்தால், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி கூட்டப்படும் பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன சிக்கல்
இந்த அம்சங்கள் ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகின்றன. காரணம், ஈபிஎஸ் தரப்புக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால், அவர்கள் எந்நேரத்திலும் பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் கோரிக்கை விடுக்கக்கூடும். அந்த கோரிக்கையை மறுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓபிஎஸ் ஆலோசனை
ஒருவேளை ஓபிஎஸ் பொதுக்குழுவை கூட்ட மறுத்தால், சட்ட ஆணையரை நியமித்து ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கும். அப்போது, பொதுக்குழுவில் பெரும்பான்மை ஆதரவு ஈபிஎஸ் பக்கம் இருந்தால், ஓபிஎஸ்ஸின் நிலை கேள்விக்குறியாகும். இந்த அம்சம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே கைகொடுக்கும் என்பதால் ஓபிஎஸ், இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
என்ன திட்டம்
பொதுக்குழுவைக் கூட்டினாலும், ஈபிஎஸ்ஸூக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அவரே ஒற்றைத் தலைமையாக வரலாம் என்பதால், இந்த விஷயத்தில் காம்ப்ரமைஸ் செய்யவே திட்டமிட்டு வருகிறார் ஓபிஎஸ். தீர்ப்புக்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கை, பிரஸ் மீட் என அனைத்திலும், இணக்கமாகச் செயல்பட ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கும் தொனியிலேயே பேசி வருகிறார். இதன் மூலம், மீண்டும் ஈபிஸ்ஸோடு இணைந்து செயல்படும் முடிவிலேயே ஓபிஎஸ் இருப்பது தெளிவாகியுள்ளது. ஆனால், இதற்கு ஈபிஎஸ் தரப்பு சம்மதிக்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாகத் தொடர்கிறது.