வெற்றுபேச்சு வேஸ்ட்! பாஜகவுடன் இணைய எனக்கு விருப்பம்! டெல்லிக்கு 3 லெட்டர் போட்ட ஓபிஎஸ்! ஓ அதுக்கா?
சென்னை : குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகக் கூறி இருக்கிறார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்த நிலையில் பாஜக தலைமையின் திடீர் கடிதத்தால் கடுப்பில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது தான் திடீர் பிரச்சினைகளுக்கு காரணம்.
பாஜகவுக்கு விழுந்த அடி.. இடைத்தேர்தலில் 3-லும் அவுட்! உ.பி செட்பேக் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா?
பாஜக தலைமை
இது பாஜக தலைமையின் முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர்களும் மூத்த தலைவர்களும் மத்திய அரசு எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்து இருக்கிறது என பேசி வருகின்றனர். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு எதுவுமே பேசாமல் இருந்த நிலையில் திடீர் என இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
டெல்லி செல்ல முயற்சி
அது அவ்வளவாக கை கொடுக்காது என தெரிந்திருந்தும் ஒரு சடங்கிற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கூறும் ஓபிஎஸ் தரப்பினர், இது தொடர்பாக முறையிட ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறுகின்றனர். ஒரு வாரத்திற்குள் இந்த பயணம் இருக்கும் எனவும் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தது போல இந்த முறை ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
மேலும் முன்னதாகவே டெல்லியில் முகாமிட்டுள்ள சில ஓபிஎஸ் தரப்பு மூத்த தலைவர்கள் பாஜக தலைமையிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போதைக்கு சந்திக்க விரும்பவில்லை என பாஜக தலைமை கூறியதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் விடாத ஓபிஎஸ் தனது மகனை டெல்லிக்கு அனுப்பி இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தீவிரமாக முயன்று வருகிறார் என்கின்றனர் தேனி தரப்பு ரத்தத்தின் ரத்தங்கள்.
பாஜகவுடன் இணைந்து பணி
இந்நிலையில் குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு தனிதனியே கடிதம் எழுதியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், பாஜகவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகக் கூறி இருக்கிறார். இது தொடர்பாக ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"150க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி குஜராத்தில் பாஜக புதிய சாதனை படைத்து இருக்கிறது. இந்தத் தருணத்தில் தனது நீடிக்கும் உறவு, கட்சியின் ஆதரவு ஆகியவை தொடரும் என உறுதியளிக்க விரும்புகிறேன். இரு கட்சிகள் இடையிலான உறவை வளர்ப்பதற்கு மட்டுமின்றி, மக்கள் நலனுக்காகவும் பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என அக்கடிதத்தில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
அமித் ஷா
தொடர்ந்து பாஜக முக்கிய தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"1985-ல் 149 இடங்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து, ஏழாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள குஜராத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன். நல்லாட்சி மற்றும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களே சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம். வரவிருக்கும் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என கூறியிருக்கிறார்.
ஜேபி நட்டா
இதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில்,"குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதைக் குறிப்பிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, பாஜக கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகளை வீழ்த்தியுள்ளது. குஜராத்தின் தேர்தல் முடிவுகள், வெற்றுப் பேச்சு மற்றும் அர்த்தமற்ற தாக்குதல்களை விட, உண்மையும் திறமையும் வாய்ந்த நிர்வாகத்தை மக்களால் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது" என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பாஜக தலைமை ஓபிஎஸ்ஸை கைவிட்டு விட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் பாஜகவுடன் இணைய விரும்புதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.