வரப்போகுது அதிரடி அறிவிப்பு.. ‘69 பேர்’ - மாவட்ட செயலாளர்கள் பட்டியல் ரெடி.. ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்!
சென்னை : நேற்று முன் தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், விரைவில் ஒரு பரபர அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள மா.செக்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்பினர் வகித்து வந்த பதவிகளைப் பறித்து தனது ஆதரவாளர்களை ஈபிஎஸ் நியமித்து வரும் நிலையில், கூண்டோடு மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ்.

கைப்பற்றிய ஈபிஎஸ்
அதிமுகவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, பொருளாளர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்தார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறித்து தனது ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கியுள்ளார். தற்போது அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வசமே உள்ளன.

ஓபிஎஸ் ஆதரவு மாசெக்கள்
மாவட்ட செயலாளர்களில் 6 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வருகிறார்கள். அந்த 6 மாவட்ட செயலாளர்களையும் அதிரடியாக நீக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த மாவட்டங்களில் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால், அங்கு பதவிகளைப் பிடிக்க பலத்த போட்டி நிலவுவதால் யாரை அறிவிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்
பொதுக்குழுவைத் தொடர்ந்து, தன்னையும் தனது ஆதரவாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆதரவாளர்களை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இரண்டு கட்டங்களாக இதுவரை 66 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் ஓபிஎஸ். அடுத்தடுத்து, பலரையும் நீக்கத் திட்டமிட்டிருந்த நேரத்தில் தான் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓபிஎஸ். இதனால் அவரது நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டது.

மாவட்ட செயலாளர்கள்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பால் இதுவரை நீக்கி வெளியேற்றப்பட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆவர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் 6 பேரை தவிர ஈபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள 69 பேரையும் நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளர்களாக அறிவிக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓரம்கட்டப்பட்டவர்கள்
மருத்துவமனையில் இருந்து ஓபிஎஸ் திரும்பி வந்து, தனது வீட்டில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வரும் நிலையில் விரைவில் அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுக்க உள்ள 75 மாவட்டச் செயலாளர்களையும் தனது ஆதரவாளர்களாகவே நியமிக்க உள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டு அதிருப்தியில் இருக்கும் பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பட்டியல் கிட்டத்தட்ட ரெடியாகி விட்டதாம்.

புதிதாக 69 பேர்
புதிதாக 69 மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பெயர்களை தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளார் ஓபிஎஸ். அதில் பலரும் முன்னாள் பொறுப்புகளில் இருந்தவர்களாம். முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், கடந்த தேர்தல்களில் சீட் மறுக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோரால் நிறைந்திருக்கிறதாம் அந்தப் பட்டியல்.

கூட்டங்கள் நடத்த திட்டம்
மாவட்ட செயலாளர்களை அறிவித்த பின்னர் ஓபிஎஸ் அணியின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொண்டர்களை ஓபிஎஸ் சந்திப்பார் என்று கூறப்படுகிறது. முன்பே தீட்டப்பட்ட சுற்றுப் பயண திட்டம் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், மா.செக்கள் அறிவிப்புக்குப் பின்னர் முழுவீச்சில் அதனை ஓபிஎஸ் தொடங்குவார் என்கிறார்கள்.

தொடர் பின்னடைவு மாறும்
கட்சியிலிருந்து நீக்கம், பொருளாளர் பதவி பறிப்பு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி பறிப்பு, நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்புகள், கட்சி அலுவலகத்தின் சாவியும் எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பது என்று தொடர்ந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்களை அறிவித்து, அதிரடி கூட்டங்களை நடத்துவதன் மூலம் மீண்டும் பரபரப்பைக் கிளப்ப முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தேர்தல் ஆணையத்தில்
மேலும், இந்த மாவட்ட செயலாளர்கள் மாற்றத்திற்குப் பின்னணியில் வேறொரு அழுத்தமான காரணமும் இருக்கிறதாம். கட்சியின் உரிமை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இருதரப்பினரையும் ஆதாரங்களை சமர்ப்பிக்கச் சொன்னால், இருதரப்பும், தங்கள் ஆதரவுள்ள நிர்வாகிகள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். ஈபிஎஸ் தம்மிடம் உள்ள எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை ஆதரவாளர்களாக காட்டிவிடுவார்.
Recommended Video

ஓபிஎஸ் கணக்கு
ஓபிஎஸ் தரப்பு, தங்களுக்கு ஆதரவான நிர்வாகிகளின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், எம்.எல்.ஏ, எம்.பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கிறது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைத்தான் தங்கள் ஆதரவாளர்களாக காட்ட முடியும். அதனால், விரைவாக மாவட்ட செயலாளர்களை நியமித்து, அவர்களின் மூலம் அடிப்படைத் தொண்டர்களின் கையெழுத்துகளை தனக்கு ஆதரவாகப் பெற்று பெரிய பட்டியலை உருவாக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கணக்குப் போட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications