மூக்கு உடைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை.. ஸ்பாட்டுக்கே விசிட்.. ‘யார் செய்த வேலை?’ உற்றுப்பார்த்த ஓபிஎஸ்!
சென்னை : சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சேதமடைந்த சிலையை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.
நெருங்கும் கிளைமேக்ஸ்! ஓபிஎஸ்? இபிஎஸ்? தேதி குறித்த உச்சநீதிமன்றம்! விடை கொடுக்குமா வெள்ளிக்கிழமை?
எம்ஜிஆர் சிலை சேதம்
சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்களால் எம்.ஜி.ஆர் சிலையின் மூக்கு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
அதிமுகவினர் போராட்டம்
இந்நிலையில், எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தென் சென்னை (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் கூடி இன்று போராட்டம் நடத்தினர். அரசு உடனடியாக சிலையை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஸ்பாட்டுக்கே போன ஓபிஎஸ்
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருடன் நேரில் சென்று சேதப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை பார்வையிட்டார். உடைந்த சில்லுகள் பீடத்தின் மேல் சிதறிக்கிடந்ததை எடுத்துப் பார்த்தார் ஓபிஎஸ். மேலும், சிலை அமைக்கப்பட்டது பற்றிய கல்வெட்டை உற்றுப் பார்த்து, அதில் இருந்த விவரங்களை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாசித்தனர்.
யார் பரமாரிப்பது? - விசாரித்த ஓபிஎஸ்
தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினரை அழைத்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது சேதப்படுத்தப்பட்டுள்ள அந்த எம்.ஜி.ஆர் சிலையை பராமரித்து வருவது யார்? எனக் கேட்டு, எப்போது இந்தச் சம்பவம் நடந்தது? போலீசார் என்ற சொல்கிறார்கள் என்ன விவகாரம் என்றெல்லாம் விசாரித்தார்.
சிலையை சரி செய்யுங்க
தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், "சென்னை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்." என வலியுறுத்தியுள்ளார்.