ஏழரை சனி ஆட்டம் ஆரம்பம்..எங்கே போனாலும் கேட்..தடைகளை உடைக்க ரகசிய பூஜை செய்த ஓபிஎஸ்
சென்னை: ஏழரை சனியின் தாக்கம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இப்போதே ஆரம்பமாகி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதிமுகவில் அதிகாரம் படிப்படியாக கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. வழக்குகளில் சாதகமற்ற தீர்ப்புகள் வந்து மண்டைக்குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது. மன அமைதிக்காகவும் இழந்த அதிகாரத்தை மீட்கவும் ரகசிய பூஜை செய்திருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த போதே அவரது தயவினால் இரண்டு முறை முதல்வரானவர் ஓ.பன்னீர் செல்வம். அவரது மறைவிற்குப் பிறகு மீண்டும் முதல்வரானார். 15 ஆண்டுகளில் மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் என்ற பெருமைக்குறியவர். கட்சியில் பொருளாளராக பதவி வகித்தவர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வத்திற்கு இறங்குமுகம் ஆரம்பித்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி பிளவு பட்டது. அவருக்கு பின்னால் சிலர் மட்டுமே சென்றாலும் அது சாதகமாகவே இருந்தது. மீண்டும் கட்சி ஒன்றிணைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். துணை முதல்வராகவும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிகார பதவியில் இருந்து வந்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
கடந்த ஜூன் மாதம் முதலே ஓ.பன்னீர் செல்வத்திற்கு போதாத காலம்தான் போல. எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் என்ன செய்யவது என்பது போல கட்சியில் அதிகாரம் கையை விட்டு போய் விட்டு எந்த கட்சியில் மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டாரோ அதே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமியின் அப்பீல் வழக்கில் சாதகமற்ற தீர்ப்பே கிடைத்தது முதல் அடியாக அமைந்து. அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த அப்பீல் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கின் தீர்ப்பு சாதகமாக கிடைத்துள்ளது இரண்டாவது இடியாக விழுந்தது. மாறி மாறி தடைகளாக உருவாகி வருவது ஓ.பன்னீர் செல்வத்தின் மன அமைதியை பறித்துள்ளது.

குல தெய்வ கோவிலிலில் வழிபாடு
ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது திதி கொடுப்பதற்கு முன்னதாகவே பல சங்கடங்கள் நிகழ்ந்து விட்டன. இதனையடுத்து ஜோதிடத்தையும் கடவுளையும் நம்பியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஜோதிடரின் அறிவுரைப்படி குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆண்டாள் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பில் உள்ள வனப் பேச்சியம்மன் கோவில் தான் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு குல தெய்வக் கோவில். இதனால் ஓபிஎஸ் குடும்பத்தினர் தொடர்ந்து அங்கு சென்று வருகின்றனர். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் ரங்கமன்னாரை மனமுருகி வழிபட்ட ஓ.பன்னீர் செல்வம் அடுத்து சிறப்பு பூஜைகளை குலதெய்வ கோவிலில் செய்திருக்கிறார்.

ரகசிய பூஜை
பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போகும் ஆவணங்களையும் குல தெய்வத்தின் காலடியில் வைத்து வெற்றிக்காக வேண்டிக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாது இழந்த அதிகாரத்தை பெறவும் கேரளா வரை சென்று ரகசிய பூஜையும் செய்திருக்கிறாராம் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுக பொன்விழா ஆண்டு
அதிமுக சாவி வழக்கிலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பை அளித்துள்ளது. எனவேதான் மாறி மாறி இமேஜ் டேமேஜ் ஆகி வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம். அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக தொடங்கப்பட்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் தனது பக்கம் எத்தனை பேர் வருவார்கள் என்பதைத் பொருத்தே செல்வாக்கை நிர்ணயம் செய்ய முடியும் என்று கணக்குப் போடுகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

ஏழரை சனி
ஏழரை சனி சிலருக்கு சரியான படிப்பினைகளைத் தரும். 2023ஆம் ஆண்டு மீன ராசிக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. சிம்ம ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கண்டச்சனி காலமாகும். ஓ.பன்னீர் செல்வம் மீன ராசி,சிம்ம லக்னம். ராசிப்படியும், லக்னப்படியும் நேரம் சரியில்லை. சனிபகவான் சாதகமாகவே இல்லை. குரு பகவானும் ஜென்மத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னப்படி அஷ்டமத்து குருவாக அமர்ந்து ஆட்டி வைக்கிறார். எங்கே போனாலும் கேட் போட்டு தடைகளை ஏற்படுத்தி வருவதால்தான் கடைசியில் கடவுளிடம் சரணடைந்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அந்த கடவுள் காப்பாத்துவாரா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications