மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்!
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்திய, வேலூர் மண்டல, இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.
மேல்மருவத்தூரில் புகழ்பெற்ற ஆதிபராசக்தி கோவில் உள்ளது. வருடம் முழுக்க இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஆதிபராசக்தி கோயிலை கொண்டுவருவது குறித்து, ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழு அமைக்கப்பட்டு மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால், இதற்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
அதிகாரிகளுக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கும் நிலை வரை மோதல் சென்றது. கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று, அறநிலையத்துறை, உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.
மேல்மருவத்தூர் கோவில் ஸ்தாபகரான பங்காரு அடிகளாருக்கு, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம், மத்திய அரசால், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள், சோதனைக்காக, கோயிலுக்குள் சென்றது பாஜக மற்றும் அதிமுக மேலிடத்தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலூர் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலை சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையராக மாற்ற தமிழக அரசு இன்று, உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications