தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி.. ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி!
சென்னை: தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை வெளியிட்டுள்ளார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக ஆனந்தனும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். இதையடுத்து, பொற்கொடி ஆதரவாளர்கள் தனி அணியாகப் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடைபெற்றது. பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு உடன் அமைதியான முறையில் இந்த பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியின் நிறைவாக ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் பவுத்த முறைப்படி புத்த வந்தனம் நடைபெற்றது. அதன்பின் ஆம்ஸ்ட்ராங்கின் சிலையை அவரது மகள் சாவித்திரிபாய் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், தேமுதிக தலைமை நிலையைச் செயலாளர் பார்த்தசாரதி, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு நாளில் 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்'என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் 32 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
TN BSP என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட நீல நிற கொடியில் தும்பிக்கையில் பேனாவுடன் யானை இருப்பது போல தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications