ஆபரேஷன் ஃபெயிலியர்.. “அந்த 3 பேரை தாண்டி தொட முடியலையே”.. ஆர்பி அப்செட்.. பின்வாங்கிய எடப்பாடி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றாக ஆர்பி உதயகுமாரை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டங்கள் பெரிய வெற்றியைத் தராததன் காரணமாகவே தேவர் குருபூஜைக்கு பசும்பொன் வராமல் எடப்பாடி பழனிசாமி பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் செல்வாக்கைச் சரிக்க, அதே சமூகத்தைச் சேர்ந்த உதயகுமாரை முன்னிறுத்தி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஈபிஎஸ்.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பின்னால் நிற்கும் முக்குலத்தோர் ஆதரவை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான் உதயகுமாருக்கு ஈபிஎஸ் கொடுத்த அசைன்மெண்ட்.
அந்த முயற்சியில் ஆர்பி உதயகுமார் தோல்வியடைந்துவிட்டது, எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வதை தவிர்த்திருப்பதன் மூலம் தெளிவாகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பசும்பொன் விசிட்டை தவிர்த்த எடப்பாடி! முனுமுனுத்த முக்குலத்தோர்! கொங்கு மண்டல கட்சியாகிறதா அதிமுக?
ஓபிஎஸ் vs உதயகுமார்
தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கைச் சரித்து, அந்த இடத்திற்கு ஆர்பி உதயகுமாரை கொண்டு வரும் திட்டத்திலேயே ஓபிஎஸ் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அறிவித்தார் ஈபிஎஸ். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான முகமாக அதே சமூகத்தைச் சேர்ந்த, தென் மாவட்டப் புள்ளியான ஆர்.பி.உதயகுமாரை முன்னிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஆதரவைச் சரிப்பதே இவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் எனக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக ஆர்பி உதயகுமாரும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஈபிஎஸ் திட்டம்
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியிருந்தாலும், அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் பெரும் பலமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது என்பது ஈபிஎஸ்ஸின் எண்ணமாக இருக்கிறது. இதற்காகவே அவர் சார்ந்த சமூகத்தின் நிர்வாகிகளை வளர்த்தெடுத்து, ஆதரவை தன் பக்கம் திருப்பலாம் எனக் கணக்குப் போட்டுள்ளார். அந்த அடிப்படையிலேயே நத்தம், விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஆர்.பி.உதயகுமாரை முன்னிறுத்தும் வகையில் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் கோட்டையில்
சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பை எதிர்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வசம் ஒப்படைத்தார் ஈபிஎஸ். பெரும் கூட்டத்தை திரட்டி சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் ஆட்களை இறக்கி கெத்து காட்டினார் ஆர்.பி.உதயகுமார். ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ் தரப்பு கூட்டிய கூட்டம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
ஓபிஎஸ்ஸுக்கு எதிரான முகம்
தொடர்ந்து, ஆர்பி உதயகுமாரின் நடவடிக்கைகள் பிரதானமாக ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிவைத்தே இருந்து வந்தன. தென் மாவட்ட பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் உதயகுமார். ஓபிஎஸ் தரப்பினர் பற்றியும், திமுக அரசுடன் ஓபிஎஸ் காட்டும் இணக்கம் பற்றியும் விமர்சித்து வருகிறார். பதிலுக்கு, ஓபிஎஸ் தரப்பினரும் உதயகுமாரை குறிவைத்து அட்டாக் செய்து வருகின்றனர். இப்படியாக, ஓபிஎஸ்ஸுக்கு எதிரான முகமாக ஆர்பி உதயகுமார் அதிமுகவினர் மத்தியில் ஃபார்ம் ஆகும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
உதயகுமார் தோல்வி
ஆனாலும், ஆர்பி உதயகுமார் தனது திட்டத்தில் தோல்வியடைந்து விட்டதையே எடப்பாடி பழனிசாமியின் முடிவுகள் காட்டுகின்றன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவின் பெரும் பலம். ஜெயலலிதா, முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக தங்கக் கவசம் அளித்ததும். அப்படியான முக்குலத்தோர் பெல்ட்டை கைப்பற்றுவதற்காகவே உதயகுமாரை முன்னிறுத்தினார் ஈபிஎஸ்.
ஆதரவை திரட்ட முடியவில்லை
ஆனாலும், முக்குலத்தோர் சமூக அமைப்புகளிடம் ஆதரவைத் திரட்டுவதில் உதயகுமார் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அதிமுகவினர் இப்போதும் ஓபிஎஸ் பக்கமே இருக்கின்றனராம். அந்த சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்கு முக்கிய பதவிகளை கொடுத்தும் பலன் இல்லை என எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருக்கிறாராம். சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என 3 பேரை தாண்டி உதயகுமாரால், முக்குலத்தோர் சமூகத்தினரை தன் பக்கம் ஈர்க்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்வாங்கிய ஈபிஎஸ்
தேவர் குருபூஜை நிகழ்வை தென் மாவட்டங்களில் தனது பலம் காட்டும் பெரிய சம்பவமாக நிகழ்த்த ஈபிஎஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேவர் தங்கக் கவசம் பெறும் பொறுப்பில் மட்டுமல்லாமல், முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவைப் பெறுவதிலும் தனது தரப்பு தோல்வியடைந்ததை உணர்ந்தே, பசும்பொன்னுக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு, சென்னை நந்தனத்திலேயே தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பெரிய பின்னடைவு
கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்தவராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் கையே ஓங்கியிருப்பதையே, ஈபிஎஸ் பசும்பொன்னுக்கு வராமல் தவிர்த்திருப்பது உணர்த்துகிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் படையையே களமிறக்கியும், தன் பக்கம் ஆதரவைத் திரட்ட முடியவில்லை என்பது ஈபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.