ஒரு நாள் மழைக்கே மிதக்கும் சென்னை.. என்ன சாதித்தது திமுக அரசு? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சென்னை: ஒரு நாள் மழைக்கு மீண்டும் சென்னை மிதக்கிறது என்றும், மின்சாரம் தாக்கி 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசின் மின்சாரத் துறை அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யச் சொல்லுவாரா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்
சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையான பாதிப்பிற்குள்ளானது.
பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் மழைக்கே சென்னை மிதக்கும் நிலையில் 8 மாதங்களாக என்ன சாதித்தது திமுக அரசு என தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்குத் தனியாகவும், மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர்களுடனும், பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் உட்பட அனைத்து முக்கியமான துறைகளை பேரிடர் மேலாண்மைத்துறையின் கீழ் ஒருங்கிணைத்து முதல்வராக மக்கள் பணியாற்றிய தனது தலைமையில், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அமைச்சர்களுடன் ஆகஸ்ட் மாதத்திலேயே குறைந்தது 5 ஆய்வுக் கூட்டங்களையாவது நடத்துவோம் எனக் கூறியுள்ளார்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம்
திமுக அரசு மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும் வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு நாள் பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர் எனவும், மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

செந்தில்பாலாஜி ராஜினாமா செய்வாரா?
வடகிழக்குப் பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள் மற்றும் வடிகால்களைச் சீரமைத்திருந்தால் இந்த பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருக்கும் யோசனைகளை, இந்த 8 மாதங்களில் செயல்படுத்தி இருந்தால் கூட, இந்த 3 உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் எனவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொன்ன இன்றைய முதல்வர், தற்போது இந்த அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு நாள் மழைக்கே மிதக்கும் சென்னை
சென்னையில் நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சாலைகளில் ஏற்கெனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும் தேங்கியது எனவும், சென்னையில் பொதுமக்கள் நேற்று வீடு திரும்ப பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்று அனைத்து ஊடகங்களும் நாளிதழ்களும் படத்துடன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன எனவும், இந்த அரசின் முதல்வர், பாதிக்கப்பட்ட இடங்களை, அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார், ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கிறார், முந்தைய அரசின் மீது பழி போடுகிறார் அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக அரசுக்கு வலியுறுத்தல்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் துறை அமைச்சர்கள் யாருமே நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும், முதல்வர் பார்வையிட்டுச் சென்றவுடன் நிவாரண உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும் பொதுமக்கள் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேட்டி அளித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இனியாவது தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக் குறை கூறாமல், மக்கள் நலப் பணிகளில் உண்மையான அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications