23 பேர் செத்துட்டாங்க! இதைவிடவா காரணம் தேவை? ஆன்லைன் ரம்மியை ஒழிங்க! வலியுறுத்தும் எடப்பாடி பழனிசாமி
சென்னை : ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்துள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதைவிடவா அரசுக்கு காரணிகள் தேவை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் கொரோனா பொது முடக்கத்தின்போது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய பலர் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தன.
இதனையடுத்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை
ஆனால் இதை எதிர்த்து சில ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்னமும் விசாரணை எடுத்துக்கொள்ளவில்லை.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க ஏதுவாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக இன்று அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடினால் ஏற்படக்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறியவும், இந்த விளையாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இந்த விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இக்குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மியை ஒழிக்க உடனே நடவடிக்கை தேவை என என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன, இத்தகைய சம்பவங்களால் இதுவரை 23பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும் ஆபத்து
ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணர்ந்து தடை செய்ய இதை விடவா இந்த அரசுக்கு காரணிகள் தேவை? ஆய்வு குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது, இந்த விடியா அரசு குழு அமைப்பதிலேயே முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு , நிரந்தர தீர்வுகாக உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications