"கல்விக்கடன் ரத்து என்னாச்சு? தமிழகம் இப்போது லஞ்சத்தில் தான் முதலிடத்தில் உள்ளது!" எடப்பாடி தாக்கு
தருமபுரி: திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அங்கு அதிமுக கொடியை ஏற்றினார்.
அந்த 'ரிப்போர்ட்'.. நடுங்கிப் போன எடப்பாடி..'யாரையும் நம்ப முடியல’- கட்சியை கைக்குள் வைக்க திட்டம்!
சந்தடி சாக்கு
அதைத் தொடர்ந்து அங்குக் கூறுகையில், "எதோ சந்தடி சாக்கில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இருப்பினும், மக்களுக்கு நன்மை தரும் எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தான் இப்போது மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். நான் போட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். எல்லாரும் கூறுவதைப் போல ஸ்டிக்கர் ஓட்டும் வேலையைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
கிராமங்கள்
கிராமங்களை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக நகரங்களுக்கு இணையான திட்டங்களைக் கிராமங்களுக்கும் கொண்டு வந்தோம். வேளான் மக்களுக்குப் பயன்படும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஆனால், இதுபோன்ற அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி குடி மராமத்து பணிகள், தடுப்பணைகள் கட்டும் பணிகளையும் கூட மேற்கொண்டோம்.
கல்விக்கடன் ரத்து
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இன்னும் கூட திமுக தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. முதியோர் உதவித் தொகை உயர்த்துவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை.
நகைக்கடன்
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என அறிவித்தார்கள். ஆனால் அதற்கு பல்வேறு புதிய விதிமுறைகளை அறிவித்து விட்டார்கள். 48 லட்சம் பேர் நகைக்கடன் வாங்கி இருந்த நிலையில், அவர்களில் வெறும் 13 லட்சம் பேருக்குத்தான் நகைக் கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். எப்போதுமே அதிமுக பொதுமக்களுக்குத் துணை நிற்கும்.
லஞ்சத்தில் முதலிடம்
ஏழை மானவர்கள் கல்வி கற்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்காக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் புதிய அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். திமுக ஆட்சியில் அனைத்திலும் முதல் இடம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், லஞ்சத்தில் மட்டும் தான் இப்போது தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது. இப்போது தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மட்டும் தான் பிழைத்த கொண்டிருக்கிறது.. அது திமுக குடும்பம் மட்டும்தான்.. மற்ற குடும்பம் அனைத்தும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது" என்று சாடினார்.