Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘தனித் தொகுதி’ என்ற சொல்லுக்கு கிளம்பும் எதிர்ப்பு.. அது என்ன ‘தனி தொகுதி’? ‘பொதுத் தொகுதி’?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் காலங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளாக தனித் தொகுதி; பொதுத் தொகுதி என்பது இருக்கிறது. அதற்குப் பொருள் என்ன? அதன் வரலாற்றுப் பின்புலம் என்ன? தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை தனித் தொகுதிகள் உள்ளன? அங்கு யார் வேட்பாளராக நிற்க முடியும்? என்பதையெல்லாம் பார்க்கலாம்.

'தனித் தொகுதி' என அழைப்பதே ஏதோ ஒரு பிரிவினையை உணர்த்துவதாகவும் ஆகவே அந்தச் சொல்லை மாற்ற வேண்டும் என்றும் மதுரையை மையமாக வைத்து கள பணியாற்றி வரும் சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஒரு புதிய விவாதத்தை அவர் தொடங்கிவைத்துள்ளார்.

Opposition to the Term Reserved Constituency Intensifies What Do that Mean

முன்னதாக 'காலனி' என்ற சொல்லே யாரும் பயன்படுத்தக் கூடாது என திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு, அந்தப் பழைய நடைமுறைக்கு ஒரு இறுதியுரை எழுதினார். அதன் தொடர்ச்சியாக இப்போது 'தனித் தொகுதி' எனச் சொல்லை இப்பொழுது மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. பொதுத் தொகுதியில் எந்தச் சாதியினரும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி போட்டியிடலாம். ஆனால், தனித் தொகுதியில் பட்டியலின வேட்பாளர் மட்டுமே நிற்கமுடியும். அவருக்குத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளரும் சாதி வேறுபாடின்றி வாக்களிக்கலாம். இந்த முறை மூலம் சட்டமன்றத்தில் போதிய அளவு பிரதிநிதித்துவம் பட்டியலின மக்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவே சிம்பிள் கான்செப்ட். ஆனால், அதற்குப் பின்னால் பெரிய போராட்ட வரலாறு ஒளிந்துள்ளது.

தேர்தல் காலம் என்பதால் எவிடென்ஸ் கதிரின் குரல் கவனிக்கத்தக்கதாக உள்ளது. இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 7,599 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 4,904 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2,460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 235 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆகவே தேர்தல் களம் முதற்கட்டத்தை இறுதிசெய்துள்ளது. இதில் 'தனித் தொகுதி'களும் அடங்கும்.

தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 68 பட்டியலின மக்களையும் 16 பழங்குடி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 9 பட்டியலின தொகுதியாகவும் 19 பழங்குடி மக்களுக்கானதாகவும் உள்ளது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 14 எஸ்சி தொகுதியாகும். 2 மட்டும் பழங்குடி மக்களுக்கானதாகும். புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் 5 பட்டியலின தொகுதியாக உள்ளது. இங்கே பழங்குடியின மக்களுக்கு எனத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

அது என்ன 'தனித் தொகுதி'?

தமிழகச் சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன என்பதை வாக்காளர்கள் பெரும்பாலானோர் அறிவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் தனித் தொகுதிகள் 44 உள்ளன. அதில் பட்டியலினத்தைத் தவிர வேறு யாரும் வேட்பாளராகப் போட்டியிட முடியாது. மேலும் 2 தொகுதிகள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரே நிறுத்த முடியும். ஆக, தனித் தொகுதியின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது.

இந்த நடைமுறைக்குக் காரணம் என்ன?

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் காந்தி. முடிவைத் தள்ளிவைக்கலாம் என்று கடிதம் எழுதினார் ராஜாஜி. யோசனையைக் காந்தி நிராகரித்தார். சிறைக்குச் சென்று காந்தியை நேரில் சந்தித்துப் பேச ராஜாஜி விரும்பினார். பிரிட்டிஷ் அரசு செவி சாய்க்கவில்லை. பின் செப்டம்பர் 20க்குப் பின் மனம் மாறி காந்தியப் பார்க்க அனுமதித்தது சர்க்கார்.

1931 நவம்பர் 13 ஆம் தேதி லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் சிறுபான்மையோர் கமிட்டியில் கடைசி கூட்டம் நடந்தது. அதில் காந்தி உரையாற்றினார். அதில், "இதர சிறுபான்மையினரின் கோரிக்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பட்டியலின மக்களின் சார்பில் விடுத்துள்ள கோரிக்கை இரக்கமற்ற கொடுமையாக எனக்குத் தோன்றுகிறது. சீக்கியர்கள் என்றென்றும் சீக்கியர்களாக இருக்கலாம். ஐரோப்பியர்கள் என்றும் ஐரோப்பியர்களாகவும் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்களாகவும் இருக்கலாம். ஆனால், தாழ்த்தப்பட்டோர் என்றென்றும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கவேண்டுமா? தீண்டாமை வாழ்வதாக இருந்தால், ஹிந்து மதம் அழிவதையே விரும்புவேன்?" என்றார்.

காந்தி ஏன் இப்படிப் பேசினார்?

1909 ஆம் ஆண்டு பிரிட்டிசார் ஆட்சியில் 'இந்தியன் கவுசில் சட்ட'மானது நடைமுறைக்கு வந்தது. அதாவது தனி வாக்காளர் தொகுதி. இதன்படி முஸ்லிம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேட்பாளராக இஸ்லாமியர் மட்டுமே போட்டி போட முடியும். வாக்களிப்பது அந்த மக்கள்தான். இதை லார்ட் மிண்டோ தான் அறிமுகப்படுத்தினார். இவருக்கு 'வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தந்தை' என்று அவர் அழைக்கப்பட்டார்.

பின்னர் 1919 இந்திய அரசு சட்டம் வந்தது. அப்போது இம்முற விரிவாக்கம் பெற்றது. சீக்கியர்கள், இந்தியக் கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ இன்டியஸ், ஐரோப்பியர்கள் எனப் பலருக்கும் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் என அட்டவணையில் கீழ் அடங்குவர்.
இது 1932 இல் வேறு வடிவம் பெற்றது. சிறுபான்மை மதரீதியான ஒதுக்கீட்டைப் பட்டியலின மக்களுக்கும் அளிக்க வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார். அதன்படி காந்திக்கும் அம்பேத்கருக்கும் கடுமையான முரண்பாடு உருவானது. பின் புனா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, இரண்டு தரப்பும் சமரச முடிவை எடுத்தது. அதன்படி இந்து மதத்தில் உள்ள அனைவருக்கும் தொகுதி ஒதுக்கீடு என்பது இல்லாமல், பட்டியலின மக்களுக்கு வழங்குவது என முடிவானது.

அதன்படி தனி வாக்காளர் தொகுதி என்ற முறை கைவிடப்பட்டு, தனித் தொகுதி என்ற முடிவு ஒப்பந்தமானது. இதில் என்ன மாற்றம் என்றால், இஸ்லாமியர் தொகுதியில் வேட்பாளரும் வாக்காளரும் ஒரே மத பிரிவைச் சேர்த்தவர்களே வாக்களிக்கலாம் என்ற முறையை மாற்றி, வேட்பாளர் பட்டியலினத்தவராகவும் வாக்காளர் எல்லோரும் அனைத்து சாதியினராகவும் இருக்கலாம் என்ற ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

இதன்பின் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படும்போதே அம்பேத்கர் இந்த நடைமுறைக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை அளித்தார். அதன்படி சட்டப்பிரிவு 330படி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான பிரதிநிதித்துவத்தைச் சட்டமாக்கினார். மாநில சட்டமன்றங்களிலும் பிரிவு 332 தனித் தொகுதியை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சர்ச்சை அம்பேத்கர் பட்டியலின மக்களுக்குத் தனி தொகுதிகளைக் கேட்டதால் வெடித்தது. அதற்கு இணங்காமல் தான் காந்தி சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இறுதியாக இந்த விவகாரம் ராம்சே மெக்னால்டின் முடிவுக்கே விடப்பட்டது. 1932 ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் முடிவைத் தெரிவித்தது. முஸ்லிம்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் தனித் தொகுதிகள் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கூறியது. உடனே காந்தி தன் உண்ணா நோன்பைப் பிரிட்டிஷ் பிரதமருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். அது நாடு முழுவதும் பதற்றத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக அம்பேத்கருக்கும் காந்திக்கும் கருத்து மோதல்கள் வலுத்தனர். எம்.சி. ராஜா இடையே தலைவர்களைச் சந்தித்துப் பேசி சுமுக முடிவை எடுக்க முயன்றார்.

ராம்சே மெக்னால்டின் முடிவின்படி 71 தொகுதிகள் பட்டியலின மக்களுக்கு எனத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் காந்தியின் ஒப்பந்தப்படி மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி 71 தொகுதிகள் 147 ஆக உயர்ந்தன.
தனித் தொகுதி வந்ததற்காக மிகச் சுருக்கமான வரலாறு இதுதான்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+