நம்பி வாங்க..சந்தோஷமா போங்க! இபிஎஸ்-ஓபிஎஸ் மீது கடுகடுப்பில் மாஜிக்கள்! வலைவீசும் அறிவாலயம்! இவருமா?
சென்னை : அதிமுகவில் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் அரசியல் நிகழ்வுகள் நடந்தேறி வரும் நிலையில் ஓபிஎஸ் இடம் இருந்து விலகிய அதே வேகத்தில் திமுக தரப்பில் ஐக்கியமாகி இருக்கிறார் கோவை செல்வராஜ். அவர் மட்டுமல்லாமல் மேலும் சில ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளும் எடப்பாடி ஆதரவாளர்களும் அணி தாவ தயாராக இருப்பதாகவும் அவர்களை வரவேற்க அறிவாலயமும் தயாராகி வருகிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலை என்ன நினைத்து அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் பாடினாரோ தெரியாது தற்போது அதிமுக தொண்டர்களின் நிலை இந்த பாடலைப் போலவே தான் இருக்கிறது என்றால் அது பொய்யாகாது.
அந்த அளவுக்கு கட்சியில் ஒவ்வொரு நொடியும் என்ன நடக்கும் என பரபரப்புடன் காத்திருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அதிமுகவின் மிக முக்கிய முழக்கமான திமுக எதிர்ப்பு என்ற கொள்கையே இரட்டை தலைமையால் மங்கி விட்டதாக போர்கொடி தூக்கினர் கொங்கு மாஜிக்கள்.
டிச.19ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
அதிமுக விவகாரம்
ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்சியில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தற்போது ஓபிஎஸ்ஸையே கட்சியை விட்டு விரட்டும் அளவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வமும் கூறிவரும் நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி
ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சிக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பதோடு, அதே வேகத்தில் திமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போடுகின்றனர். அதிமுக என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் நான் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்றிய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை" எனக் கூறியிருக்கும் கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அதிர வைத்திருக்கிறார்.
மாஜிக்கள்
திமுக தரப்பிலிருந்து அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட அவர்களுடன் நேரிடையாக பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதும் ஊடகங்கள் மூலம் வெளியான நிலையில் கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி. இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் போல மிக ஆவேசமாக பேசி வந்த ஒருவரும் திமுக தரப்பில் இணைய பேச்சுவார்த்தையை துவக்கி இருப்பதால் ஓபிஎஸ்ஸும் மிக அதிருப்தியில் இருக்கிறார்.
கடும் அதிர்ச்சி
திமுக தலைமையுடன் மிக நெருக்கம் காட்டி வரும் முக்கிய அமைச்சர் ஒருவர் வாயிலாகத்தான் இந்த பேச்சுவார்த்தைகள் அரங்கேறி வருகின்றனர். கட்சிக்கு வந்தால் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் வலைவீசத் துவங்கியிருக்கும் அந்த அமைச்சர் இது தொடர்பாக அறிவாலய தரப்பில் சொல்லி ஓகே வாங்கி விட்டார் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். இந்த தகவலால் அதிமுக கூடாரம் கதிகலங்கிப் போயுள்ளது என்கின்றனர் அக்கட்சியினர்.