ஒ.பி.எஸ். திமுகவின் B-டீமா..? செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் நேருவின் பதில் இதுதான்!
சென்னை: ஓ பன்னீர் செல்வம் தி.மு.கவின் பீ டீம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, இதற்கு தலைவரை தான் கேட்க வேண்டும் என்று பேசினார்.
நாமக்கல்லில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீஞ்சூரில் 100 எம்.எல்.டியும், நெம்மேலியில் 100 எம்.எல்.டியும் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை..
புதிதாக 400 எம்.எல்.டியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.. சென்னைக்கு தேவையான திட்டம் விரிவாக தயாரிக்கப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. இதைத்தாண்டி மழை நீரை தேக்கி வைப்பதற்காக செம்பரம்பாக்கம் ஏரியை போல பெரிய ஏரியை உருவாக்கமும் முயற்சியை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் இன்னும் 35 ஆண்டுகளுக்கான திட்டங்களை செய்ய முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறோம்'' என்றார்.

தலைவரிடம் கேளுங்கள்
அப்போது ஓபிஎஸ் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த கே.என்.நேரு, ''இதையெல்லாம் தலைவரிடம் கேளுங்கள்'' எனக்கூறியபடி பேட்டியை முடித்துக்கொண்டார். முன்னதாக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல் ஏக்களின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்தால் அதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உண்ணா விரத போராட்டத்தை அறிவித்தது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது
ஆனால், அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்க போலீஸ் மறுத்து விட்டது. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வந்த எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டனர்.

ஒருபோதும் பலிக்காது
அப்போது செய்தியளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ''ஓபிஎஸ்ஸை பி டீமாக வைத்து அதிமுகவை கட்டுப்படுத்த முக.ஸ்டாலின் முயற்சிக்கிறார். சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். எதிர்க்கட்சியை ஒடுக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறார். அதிமுகவை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எண்ணுகிறார். அவருடைய எண்ணம் ஒருபோதும் பலிக்காது'' என்று கடுமையாக விமர்சித்தார். இதை வைத்து தான் அமைச்சர் கே என் நேருவிடம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications