சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம்.. உன்னிப்பாக கவனிக்கும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்.. ஆக்ஷனுக்கு ரெடி!
சென்னை : சிவசேனா பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ள நிலையில், அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புகள்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே என இரு அணியாகப் பிரிந்துள்ளது. இருவரும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே கட்சி இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிமுகவிலும் இதேபோன்றே நிலை இருப்பதால், சிவசேனா தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
நேரம் பார்த்து இப்படி நடக்கணுமா? ஓரம் கட்டப்பட்டாரா ஓபிஎஸ்.. டெல்லி போகாதது ஏன்? காரணமே வேறாம்!
சிவசேனா குழப்பம்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி அடைந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக உடனான கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது. துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்று இருக்கிறார். தற்போது உண்மையான சிவசேனா யாருடைய அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எம்.எல்.ஏக்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. சட்டமன்றம் மற்றும் மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர்களே உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியை கண்ட்ரோலில் கொண்டு வர
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரும், மக்களவையில் மொத்தமுள்ள 18 பேரில் 12 பேரும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் தேர்தல் ஆணைய சட்டப்பிரிவு 15ன் கீழ் தங்களது அணியை சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்ட கடிதங்களில், சிவசேனா கட்சியில் சிலர் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர். கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியின் சின்னத்தையோ அல்லது பால் தாக்கரே பெயரையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, கட்சி தொடர்பாக எந்த வித உரிமையும் அவர்களுக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம்
இதையடுத்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இரு அணியினரின் கடிதங்களையும் பார்க்கையில் சிவசேனா இரண்டாக உடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை, விளக்கங்களை தாக்கல் செய்யவேண்டும். இக்கடிதத்திற்கு வரும் 8ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தீவிரம்
இதையடுத்து, இரு தரப்பினரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏக்களின் கடிதங்களை தயாராக வைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளின் மூலம் தங்களுக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சிவசேனா - அதிமுக
கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் சிவசேனா நிலையும், தமிழகத்தில் தற்போதைய அதிமுக நிலையும் ஒன்று போலத்தான் இருக்கிறது. அங்கு ஆட்சியில் இருந்த கட்சியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் இங்கு எதிர்க்கட்சியான அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே தாங்களே கட்சிக்கு அதிகாரப்பூர்வ தலைமை எனக் கூறி எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.
இருவரும் முறையீடு
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பை விளக்கி கடிதங்கள் அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, தனக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகளோடு கூடிய கடிதங்களை சமர்ப்பித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் சட்ட விதிகளைக் கூறி, எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வாதம் செல்லாது என முறையிட்டு இருக்கிறார்.
உற்றுநோக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்
இந்நிலையில், சிவசேனா தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே உற்று நோக்கி வருகின்றனர். அங்கு இரு அணிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒவ்வொரு விஷயமாக கவனித்து வருகின்றனர். அதுபோலவே, தங்களுக்கு ஆதரவான ஆதாரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தொண்டர்களின் கையெழுத்து
பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் இருப்பதால் தொண்டர்களின் ஆதரவு தனக்கு அதிகம் என்று காட்டுவதற்காக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள் மூலம், மாவட்ட வாரியாக அடிப்படைத் தொண்டர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
தனது ஆதரவு நிர்வாகிகளை தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கும் வகையில், விரைவில், அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்களை மாற்றி தனது ஆதரவாளர்களாக நியமிக்கவும் ஓபிஎஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.