அதே பாயிண்ட்.. ‘யூகம்’.. 'நீதிபதி என்ன கட்சிக்காரரா?’ - பரபரவென தயாராகும் ஓபிஎஸ் லீகல் டீம்!
சென்னை : ஐகோர்ட் தீர்ப்பில் உள்ள விஷயங்களை அலசி ஆராய்ந்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் 'லீகல் டீம்', தீர்ப்பின் பல அம்சங்களை தங்களுக்கு சாதகமான பாயிண்டாக திருப்பத் திட்டமிட்டுள்ளதாம்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 127 பக்க தீர்ப்பை அலசி வருகின்றனர்.
அதில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை அப்படியே கேள்விகளற்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டிருப்பதை மேல்முறையீட்டு வழக்கில் சுட்டிக்காட்டத் திட்டமிட்டுள்ளனராம்.

ஓபிஎஸ்-க்கு பாதகமான தீர்ப்பு
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்து தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

லீகல் டீம் ஆலோசனை
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், மனோஜ் பாண்டியன், திருமாறன், ராஜலட்சுமி பிரகாஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முக்கியமான புள்ளிகள்
தொடர்ந்து, தீர்ப்பில் இருக்கும் சிக்கல்கள் பற்றி ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் பல இடங்களில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன எனக் கூறும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், சட்ட விதிகளுக்கு எதிரான விஷயங்கள் எங்கெங்கு எல்லாம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன என பாயிண்டுகளை அலசி வருகின்றனராம்.

ஈபிஎஸ் வாதங்களே
எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதங்களை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளதாக ஓபிஎஸ் லீகல் டீம் கருதுகிறதாம். உதாரணமாக, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்டமுடியாத நிலை உள்ளது, அப்படி ஒரு நிலையில் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கூற முடியாது என தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள், ஈபிஎஸ் தரப்பு வாதமாகவே வைத்தவை தான்.

கட்சி முடங்கும்
பொதுக்குழு, செயற்குழுவை இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் ஈடு செய்ய முடியாத இழப்பு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது, கட்சி முடங்கும் நிலையில் உள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாயிண்டுகளோடு தயாராகும் வக்கீல்கள்
இதை தங்கள் தரப்புக்கான பாயிண்டாக திரட்டி வருகிறதாம் ஓபிஎஸ் தரப்பு. கட்சி நலன் என ஈபிஎஸ் தரப்பு வைத்த வாதங்களை நீதிபதிகள் அப்படியே ஏற்றுள்ளனர். நீதிமன்றம், சட்டம், உரிமை சார்ந்து ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர, கட்சிக்கு ஏற்படும் இழப்பு என்ற யூகத்தின் அடிப்படையில் எல்லாம் உத்தரவிட முடியாது என பாயிண்டுகளை முன்வைத்து தயாராகி வருகிறதாம் ஓபிஎஸ் லீகல் டீம்.

அதே பாயிண்ட்
கடந்த முறை தனி நீதிபதி யூகங்களின் அடிப்படையில் தீர்ப்பில் சில கருத்துகளை குறிப்பிட்டதாக மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் தெரிவித்தது ஈபிஎஸ் தரப்பு. இப்போது அதே பாயிண்டை முன்வைகக் ஓபிஎஸ் தரப்பும் தயாராகி வருகிறது. இது உச்ச நீதிமன்றத்தில் எந்தளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications