ஓபிஎஸ்..சசிகலா..டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்ப்போம்..அது ஒரே கண்டிசன்தான் - கடம்பூர் ராஜு
சென்னை: ஒற்றைத்தலைமை இபிஎஸ் தான் என ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொள்வோம் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இபிஎஸ் அதிமுக ஒற்றைத்தலைமைக்கு முழுமையாக வந்தபின் சசிகலா, தினகரனை கட்சியில் இணைப்பது பற்றி முடிவெடுப்பார் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு செல்லாது. ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரியமா சுந்தரம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

தனி நீதிபதி தீர்ப்பு
அவர்கள் தனி நீதிபதியின் தீர்ப்பில் தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்றும் தனி நீதிபதி கூறியுள்ளது தவறு என தெரிவித்தனர். ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் குறிப்பிட்டனர்.

எம்ஜிஆர்
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று வாதிட்டனர். அடிப்படை உறுப்பினர்களால் பொதுசெயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான் எனவும் இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்ஜிஆர் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பளித்தனர். அதில், ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

கடம்பூர் ராஜு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு
இந்த தீர்ப்பை பார்த்து ஆச்சரியப்படுவது ஒன்றுமில்லை இது நியாயத்தின் தீர்ப்பு.

ஒற்றைத்தலைமை
நீதிமன்றமாக இருந்தாலும் சரி தேர்தல் ஆணையம் இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் மெஜாரிட்டியாக யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் வெற்றி பக்கம் தான் நீதி இருக்கும். ஒற்றைத் தலைமை தான் என்று முடிவை ஏற்றுக்கொண்டு வந்தால் இணைத்துக் கொள்ள தயார் ஆனால் ஒற்றைத் தலைமை என்பது முடிவு மாற்று கருத்து இல்லை. அதிமுக தலைமை எங்கே இருக்கின்றதோ அங்க தான் அதிமுக இருக்கும் தொண்டர்கள் இருப்பார்கள் தொண்டர்களும் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருக்கிறது நாங்கள் வலுவாக இருக்கிறோம்

பயப்படவில்லை
எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்தால் இணைத்து கொள்வோம் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது அரசியல் கட்சி நடைமுறையில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி விட்டது. நாங்க எதை பார்த்து பயப்படவில்லை 98 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளார்கள் 2 சதவீதம் உள்ளவர்களை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

அதிமுகவின் ஆணி வேர்
இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் போயிருக்கலாம். ஆனால் அங்கு நான்கு பேர் தான் இருக்கலாம் அவர்கள் கூட திரும்ப எங்களுடன் வந்து இணையலாம். தமிழகத்தில் யாரும் வளர முடியாது தமிழகத்தில் பெரிய இயக்கமாக அதிமுகவில் உள்ளது எத்தனையோ பிளவுகளை அதிமுக பார்த்து உள்ளோம் இது ஒன்றும் புதிதல்ல. பொறுப்பில் உள்ளவர்கள் நிர்வாகிகள் அணி மாறலாம் ஆனால் அதிமுகவை பொருத்தவரை அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான் தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைத்துக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒற்றைத் தலைமை வந்தவுடன் இது குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications