‘அவருக்கு’மட்டும்தான் அனுமதி! ஓபிஎஸ் ஆதரவாளரை வெளியே விரட்டிய போலீஸ்! தேர்தல் ஆணைய கூட்டத்தில் பரபர!
சென்னை : ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பான தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். தானும் உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறிய ஓபிஎஸ் ஆதரவாளர் சதீஷ்குமாரை காவல்துறையினர் வலுகட்டாயமாக வெளியேற்றினர்.
தேர்தல் சமயங்களில் முறைகேடுகள் மற்றும் கள்ள ஓட்டு ஆகியவற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைய இருக்கிறது.
இதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான அரசியல் கட்சி உடைய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஊழலிலேயே கொடுமையான ஊழல்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் ஆதங்கம்.. ஸ்மார்ட் சிட்டி பற்றி விளாசல்!
ஆலோசனைக் கூட்டம்
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11:00 மணி அளவில் அரசியல் கட்சியுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாஜக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
ஓபிஎஸ் இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் பொதுவாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஜெயக்குமார்
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறிவரும் ஓ .பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது அதன் அடிப்படையில் அவர் தரப்பிலிருந்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கோவை செல்வராஜ் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கோவை செல்வராஜ்
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே முதல் ஆளாக இடம் பிடித்த அவருக்கு அருகில் இருந்த அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் மாற்றி வைத்தது சமூக வலைதளங்களுக்கு பேசு பொருளானது. இதனிடையே ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளராக ஆலோசனைக் கூட்டத்தில் இரண்டாவது நபராக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளே செல்ல மூன்று முறை முயற்சி செய்தார் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
Recommended Video
வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சதீஷ்குமார் ஓபிஎஸ் அணியில் தென் சென்னை மாவட்ட செயலாளராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டும் இரண்டு நபர்களை அனுமதித்து இருக்கிறீர்கள் எங்கள் தரப்புக்கும் இரண்டு நபர்களை அனுமதியுங்கள் என காவலர்களுடன் வாக்குவாதம் செய்த நிலையில், எடப்பாடி தரப்பில் லெட்டர் பேடில் இரண்டு பேர் பெயரும் உள்ளது. ஆனால் ஓபிஎஸ் லெட்டர் பேடில் கோவை செல்வராஜ் பெயர் மட்டுமே உள்ளது. அதனால் உங்களை உள்ளே அனுப்ப முடியாது என கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.