முக்கிய ஆவணங்களை வண்டியில் ஏற்றிய ஓபிஎஸ்.. சசிகலா காலில் இபிஎஸ் விழுந்ததை கிண்டல் செய்த ஆதரவாளர்கள்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ள நிலையில், சசிகலா - இபிஎஸ் இடையேயான வரலாற்றை ஆதரவாளர்கள் நடித்து காட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இறுதியாக உயர் நீதிமன்றத்தை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு, நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக அமையவில்லை.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகம் வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ராயப்பேட்டை ரத்தக்களமாக மாறியது.
அடுத்ததாக கலவரங்களுக்கு மத்தியிலும் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைகளுக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நின்ற பால்கனியில் உற்சாகமாக தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
அதே நேரத்தில் ஆத்திரம் அடங்காத ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை கிழித்து அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே வைத்து தீவைத்துக் கொளுத்தினர். அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கார் கண்ணாடிகள் கட்டையால் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீஸார், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரத்திற்குள் சூழல், காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்தும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வந்த நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக அலுவலகம் வருவதாக தகவல் வெளியாகியது. இதனால் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர, காவல் துறையினர் ராயப்பேட்டையில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் 2017ல் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை சசிகலா முன்மொழிந்த போது, காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமியை போல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடித்து அதகளம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த வரவு செலவு கணக்குகள், முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications