‘இடைக்கால’ சந்தோஷம் தான்.. எங்க ஆட்டம் இருக்கு.. ‘பறந்த வண்டி’ - அசராமல் காய்நகர்த்தும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்திருந்தாலும், இறுதி வெற்றி எங்களுக்குத்தான், தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான பலன் கிடைக்கும் என அசராமல் கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தயாராகி வருகிறார் ஓபிஎஸ். தீர்ப்பு வந்ததுமே பெரியகுளத்தில் இருந்து சென்னைக்கு வண்டியை விட்டார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இன்றைய தீர்ப்பு எடப்பாடிக்கு இடைக்கால மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்புதான், விரைவிலேயே டெல்லியில் பெரிய அடி கிடைக்கும் எனப் பேசி வருகிறார்கள்.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும் இன்று வெளியான உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியை ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது.
என்ன சொல்றீங்க.. ஓபிஎஸ்-எடப்பாடி மீண்டும் இணைய சான்ஸ் இருக்கா.. கே.பாலகிருஷ்ணன் சொல்றதை பாருங்க
மேல்முறையீடு செய்ய திட்டம்
கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தனி நீதிபதி கொடுத்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் உற்சாகம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சென்னை பசுமை வழிச் சாலை உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அதிமுக நிர்வாகிகள் ஈபிஎஸ்ஸை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ஈபிஎஸ் உற்சாகமாக சிரித்த முகத்துடன் காணப்பட்டார். கடந்த முறை வந்த தீர்ப்பால் அப்செட் ஆகியிருந்த ஈபிஎஸ், இந்த தீர்ப்பால் நிமிர்ந்து அமர்ந்துள்ளார்.
ஈபிஎஸ் தரப்பு அதிரடி
ஈபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும், ஓபிஎஸ் எத்தனை முறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே வெற்றி கிடைக்கும் என்று கூறி வருகின்றனர். தொண்டர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பதால் ஈபிஎஸ்ஸே நீதிமன்றத்திலும் வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கின்றனர்.
இடைக்கால மகிழ்ச்சி கொள்ளட்டும்
அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. அனைவரும் இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ்ஸின் நோக்கம், இந்தத் தீர்ப்பில் ஈபிஎஸ் தரப்பு குதிக்கவோ கொண்டாடவோ ஒன்றுமே இல்லை. போன முறை வந்த தீர்ப்பால் சோக முகமாக காணப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு இடைக்கால மகிழ்ச்சி அவ்வளவுதான். இடைக்கால பொதுச் செயலாளாருக்கு ஒரு இடைக்கால மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது நீதிமன்றம் என்கிறார்கள்.
எடப்பாடியை பார்த்தீங்களா?
எடப்பாடி பழனிசாமியை கவனித்திருப்பீர்கள். தங்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்தால் வீட்டை விட்டு வெளியே வராமல் கதவைப் பூட்டிக்கொண்டு கோபமாக இருப்பார், ஆதரவாளர்கள் மீது கோபத்தைக் காட்டுவார். சாதகமான தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சியாக வெளியே வருவார், ஓபிஎஸ் அதுபோல இல்லை. தீர்ப்பு எப்படி வந்தாலும் ஒரே மனநிலையோடு தான் இருப்பார். வெற்றி தோல்விகள் எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே அல்ல. இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும் என்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் இருக்கிறது
மேலும், தொண்டர்கள், நிர்வாகிகள் உண்மையை உணர்ந்து, ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை ஓபிஎஸ் தலைமையில் தான் அதிமுக சந்திக்கும். அதிமுகவும், இரட்டை இலையும், ஓபிஎஸ்ஸுக்குத்தான் என தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். கட்சியில் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்களிடையே இப்போதே எழுச்சி தொடங்கியிருக்கிறது எனக் கூறுகிறார்கள்.
சென்னையில் ஆலோசனை
இன்று சென்னை சென்றுகொண்டிருக்கும் ஓபிஎஸ், இரவே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார் என்றும், தீர்ப்பின் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். பொதுக்குழு தொடர்பாக மட்டுமே இந்த தீர்ப்பு அமைந்திருப்பதால், பிரதான வழக்கில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறதாம் ஓபிஎஸ் டீம்.