கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள்..1450 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவு
நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறைகளின்போதும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து, கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 1450 பஸ்கள் கூடுதலாக இயக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வுகள் முடிந்த பிறகு கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் தங்கி படித்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். மேலும் பலர் கோடைவாஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டனர். மேலும் மாணவர்கள் பலர் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்களுக்கு குடும்பத்தோடு சென்றுவிட்டனர்.
ஊர்களுக்கு விடுமுறையை கொண்டாட சென்றவர்கள் விடுமுறை முடிந்து விட்டதால், சென்னைக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். இன்று இரவு அதிகப்படியானோர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தான் இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில் சுமார் 1450 கூடுதல் பேருந்துகளை பல்வேறு இடங்களில் இருந்து இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக 250 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக பஸ்களை இயக்குவதற்கு தயாராக இருக்கும்படி அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.