தமிழகத்தின் நிரந்தர முதல்வர்! ஸ்டாலின் தான் எங்கள் குலசாமி! சிறுமி டான்யாவின் பெற்றோர் உருக்கம்
சென்னை: ‛‛தமிழ்நாட்டின் நிரந்தர முதல் அமைச்சராக தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் தான் இருக்க வேண்டும். அவர் தான் எங்கள் குடும்பத்தின் குலசாமி'' என முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் பெற்றோர் உருக்கமாக கூறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர்ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் டான்யாவுக்கு வயது 9. இவர் வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
Recommended Video
இவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கன்னம் சிதைந்து அவதிப்பட்டு வந்தார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

சிகிச்சைக்கு ஏற்பாடு
இதையடுத்து முதல்வர் முக ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து சிறுமி டான்யாவுக்கு தேவையான மருத்துவ உதவி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் டான்யாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. டான்யாவுக்கு 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் 10 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். இந்தியாவில் முதன் முதலாக சிறுமி டான்யாவுக்கு தான் முகைச்சிதைவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது சிறுமி டான்யா தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார்.

செல்போனில் பேசிய முதல்வர்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு டான்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் அமைச்சர் நாசருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கிடையே சிறுமியின் பெற்றோரிடம், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி நம்பிக்கையூட்டினார். அப்போதும் அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதல்வர் தான் குலசாமி
இந்நிலையில் தான் சிறுமி டான்யா நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் சிறுமி டான்யாவின் பெற்றோர் இன்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‛‛முதல்வரை சந்திக்க மகள் டான்யா மற்றும் நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் இருக்க வேண்டும். அவர் தான் எங்கள் குடும்பத்தின் குலசாமி'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

ரூ.1 லட்சம் உதவி
இதற்கிடையே தான் மாதவரம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ சுதர்சனம் சிறுமி டான்யா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்தார் , மருத்துவர்களிடம் சிறுமியின் சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications