அதிமுகவின் கடன் தள்ளுபடி அறிவிப்புகள்- பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை: ப. சிதம்பரம் சாடல்
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுகிறார்; ஆனால் கடன் தள்ளுபடி அறிவிப்புகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லையே என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி!
2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ 65,994 கோடி பற்றாக்குறை! இந்தப் பற்றாக்குறையை நிரப்பவதற்கு தமிழ்நாடு அரசு மேலும் கடன் வாங்கப் போகிறது.
இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று எடப்பாடி பழனிச்சாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார்
இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை! "எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே" என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.