இனி எனக்கு வேண்டாம்.. பாரிவேந்தர் அதிரடி முடிவு? - டெல்லி புள்ளிகளிடம் மூவ்.. ‘பெரம்பலூர்’ யாருக்கு?
சென்னை : ஐஜேகே நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் பாஜகவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும், தனது மகனை தேர்தலில் களமிறக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று எம்.பியாக வெற்றி பெற்ற ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து என்ற பாரிவேந்தர், திமுகவையே விமர்சித்துப் பேசி வருகிறார்.
பாரிவேந்தர், பாஜக கூட்டணியில் இணைய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியை மீண்டும் பெற இப்போதே பாஜக தலைமையிடம் காய் நகர்த்தி வருகிறாராம்.
தனது மகன் ரவி பச்சமுத்துவை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வைக்க பாரிவேந்தர் முயன்று வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஐஜேகே 6 வார்டில் வெற்றி.. அமமுகவில் அப்பா, மகன், மகள் வெற்றி.. உள்ளாட்சி தேர்தல் சுவாரசியங்கள்..!
பாரிவேந்தர்
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்ற பச்சைமுத்து, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கப்படாத நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் போட்டியிட்டது ஐஜேகே. திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற பாரிவேந்தர் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து திமுகவிற்கு எதிரான கருத்துகளை பேசி வருகிறார். அதேநேரம், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து பாராட்டியும் பேசியிருந்தார்.
வேதனைப்படுகிறேன்
மேலும், பாஜக கூட்டணியில் சேர முயற்சித்தோம், ஆனால், முடியவில்லை என்பதால் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். என்னை பொறுத்தவரை எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி தான். இதற்காக நான் போகாத இடத்திற்கு போயிருக்க வேண்டாம். நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன் எனப் பேசினார் பாரிவேந்தர்.
கண்டுகொள்ளாத ஸ்டாலின்
பாரிவேந்தர், திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து கவலையோடு பேசியது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற, பாரிவேந்தர், திமுகவை தரம் தாழ்த்தி விமர்சித்து வருகிறார் என்றும் அவரது எம்.பி. பதவியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமைக்கும் புகார்கள் பறந்தன. எனினும், ஸ்டாலின் இதனை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவரது நடவடிக்கைகளை கண்டுகொள்ள வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது.
பாஜக கூட்டணியில்
இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைவதற்கான தொடர் முயற்சிகளில் பாரிவேந்தர் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரம்பலூர் தொகுதியை இப்போதே புக் செய்யும் வகையிலும் தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேசி வருகிறாராம். இதற்காக, பெரம்பலூர் தொகுதி மக்களுக்காக தான் செய்த பணிகளை பட்டியலிட்டு, பாஜக புள்ளிகளிடம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறி வைத்த பாரிவேந்தர்
மேலும், பெரம்பலூர் தொகுதியில் இந்த முறை தனது மகன் ரவி பச்சமுத்துவை களமிறக்கவும் பாரிவேந்தர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாக தனது மகனை தேர்தலில் களமிறக்கி எம்.பியாக்கிவிட்டு தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் பாரிவேந்தர். ரவி பச்சமுத்து தான் ஐஜேகே கட்சியின் தலைவராக இருக்கிறார். அவரை அடுத்த தேர்தலில் களமிறக்குவது பற்றி கட்சி நிர்வாகிகளிடமும் பேசியுள்ளாராம் பாரிவேந்தர்.