விஜய்க்கு தான் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஓட்டு! அடித்துச் சொல்லும் பழ.கருப்பையா!
சென்னை: விஜய் தொடங்கும் தமிழக வெற்றி கழகத்துக்கு தான் சிறுபான்மையினர் வாக்களிப்பார்கள் என பழ.கருப்பையா அடித்துக் கூறுகிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் வாக்குகளை பெற்றதால் தான் திமுக பலமான கட்சியை போல் திகழ்வதாகவும் இனி பலவீனம் அடைந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வாக்களிக்க விரும்பாமல் வேறு வழியின்றி திமுகவுக்கு வாக்களித்த சிறுபான்மை மக்கள் இனி விஜய்க்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை விஜய் உடனே சூட்டோடு சூடாக கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் திமுகவால் மெஜாரிட்டியாக ஜெயிக்க முடியாது எனவும் பழ.கருப்பையா யோசனை தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இடம் மாறுவார்கள் என்று கூறியுள்ள பழ.கருப்பையா, விஜய் ரொம்ப நல்ல மனிதர் எனவும் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்தார். விஜயை இப்போதே சிலர் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறிய பழ.கருப்பையா, அவர் பெயர் ஜோசப் ஆக இருந்தால் என்ன தவறு என வினவியுள்ளார். விஜய் தமிழன் தானே, தமிழை தாய் மொழியாக கொண்டவர் தானே பிறகென்ன வந்தது என விஜய்க்கு பக்கபலமாக குரல் கொடுத்துள்ளார்.
மதத்தை வைத்து விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு எல்லாம் விஜய் பயப்படமாட்டார் என்றும் சங்கிகள் தான் இப்படியெல்லாம் பேசுவார்கள் எனவும் கூறிய அவர், திமுக அரசு ஊழல் மலிந்து காணப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பழ.கருப்பையா தாம் நடத்தி வரும் தமிழக தன்னுரிமை கழகம் என்ற கட்சியை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் கரைத்துவிட்டு விஜயின் அரசியல் ஆலோசகராக திகழக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
இது நாள் வரை திமுகவுக்கு மட்டுமே வாக்களித்து வந்த சிறுபான்மை மக்கள் இனி விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என பழ.கருப்பையா தெரிவித்துள்ள கருத்து சற்று சீரியஸானது. இந்த விவகாரத்தின் மீது திமுகவும் சற்று கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications